‘திலி’, ‘மச்சகந்தா’, ‘புலா’ மற்றும் ‘கனாட்டியா’ போன்ற அரிய நெல் வகைகளையும் கமலா பூஜாரி அழியாமல் காப்பாற்றியுள்ளார். இயற்கை விவசாயத்தைப் பெருக்க வேண்டும் என்ற நல்லெண்ணத்தில் பல கிராமங்களுக்குச் சென்று விவசாயிகளை குறிப்பாக பெண்களை இயற்கை விவசாயம் பக்கம் திருப்பி இருக்கிறார். அதுபோக, இயற்கை உரங்களின் பயன்பாடு பற்றியும் பல விவசாயிகளுக்கு விளக்கம் கொடுத்திருக்கிறார். அதனால் தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க்கில் 2002ல் ஈக்வேட்டர் இனிஷியேட்டிவ் விருது கமலா பூஜாரிக்கு அளிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து 2019ம் ஆண்டில் விவசாயத் துறையில் அவர் ஆற்றிய பங்களிப்பிற்காக இந்திய அரசாங்கம் அவருக்கு பத்மவிருதும் வழங்கி கவுரவித்து இருக்கிறது.
எம்.எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி அறக்கட்டளையால் தொடங்கப்பட்ட திட்டத்தில் கமலா பூஜாரி ஒரு தலைவராக இருந்துள்ளார். அப்போது (1994ம் ஆண்டு) கோராபுட்டில் அதிக மகசூல் தரக்கூடிய மற்றும் உயர்தர நெல் வகையான ‘கலாஜீரா’ உருவாக்கப்பட்டது. 2018ம் ஆண்டில் ஒடிசா மாநில திட்டமிடல் குழுவில் உறுப்பினராகவும் பங்காற்றி இருக்கிறார் கமலா. 2004ம் ஆண்டில் ஒடிசா அரசாங்கத்தால் சிறந்த விவசாயி விருது வழங்கி கவுரவிக்கப்பட்டார். புவனேஸ்வரில் உள்ள ஒடிசாவின் முதன்மையான விவசாய ஆராய்ச்சி நிறுவனமான ஒடிசா வேளாண்மை மற்றும் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் இந்த விருதை வழங்கியது. இயற்கை விவசாயத்திற்கும், பாரம்பரிய நெல் ரகங்களையும் பரவலாக்கம் செய்த கமலா பூஜாரி கடந்த 21ம் தேதி உடல்நலக் குறைவால் காலமானார். அவர் நம் நினைவில் என்றும் இருப்பார்.
கமலா பூஜாரி தனது சொந்த மண்ணான கோராபுட் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பயணித்து, அங்குள்ள பெண்களைச் சந்தித்து ரசாயன உரத்தின் தீமை எடுத்துரைத்தார். அவரது விளக்கத்தினால் விபரம் அறிந்துகொண்ட பெண் விவசாயிகள் ரசாயன உரங்களை மறந்துவிட்டார்கள். முழுக்க முழுக்க இயற்கை வழி விவசாயத்திற்கு வந்துவிட்டார்கள். இதனால் ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு (FAO) கோராபுட் பகுதியை உலகளாவிய முக்கியத்துவம் வாய்ந்த விவசாய பாரம்பரியத் தளமாக அறிவித்தது.