வடமதுரை: வடமதுரை அருகே கோயில் திருவிழாவில் நேற்று கழுமரம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். வடமதுரை அருகே மோளப்பாடியூரில் முத்தாலம்மன் கோவில் மற்றும் மாரியம்மன் எட்டுக்கை வீரமகாகாளியம்மன், பகவதியம்மன் கோயில் திருவிழா சிறப்பாக நடைபெற்றது. இந்த திருவிழா கடந்த 21ம் தேதி தொடங்கி 5 நாட்கள் நடைபெற்றது. இதையொட்டி பொங்கல் வைத்தல், மாவிளக்கு எடுத்தல், முளைப்பாரி எடுத்தல், தீச்சட்டி எடுத்தல், கிடாய் வெட்டுதல், மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தேரில் அம்மன் வீதி உலா வருதல், பத்ரகாளியாட்டம் மற்றும் கரகாட்டம் தேவராட்டம் ஆகியவை நடைபெற்றது. தெம்மாங்கு பாடல் இசைக்கச்சேரி ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
படுகளம் நிகழ்ச்சி
திருவிழாவின் நான்காம் நாளான நேற்று படுகளம் நிகழ்ச்சி நடைபெற்றது. படுகளம் என்பது கோவில் முன்பு உயரமான இரண்டு கழுமரம் நடப்பட்டிருக்கும். அதன் உச்சியில் காணிக்கை மஞ்சள் துணியில் வைத்து கட்டியிருப்பர். அந்த மரத்தில் இரண்டு பேர் உயரத்தில் ஏறி காத்திருப்பார்கள். அப்போது கோவில் முன்பு சிறுவர்களை படுக்க வைத்து வெள்ளை துணியால் மூடி வைத்து பெண்கள் அழுதபடி ஒப்பாரி பாட்டு பாடுவார்கள். காரணம் அந்த சமயம் அந்த சிறுவர்களும் மரணம் அடைந்துவிட்டதாக கருதி கதறி அழுவார்களாம். கழுமரத்தின் கீழே ஒரு ஆடுகள் வெட்டி பலியிடுவார்கள்.
அதன்பின் கழுமரத்தில் மேலே இருந்து இருவரும் மின்னல் வேகத்தில் கீழே இறங்கி வருவார்கள். அவர்கள் வருவதற்குள் வெள்ளை துணியால் போர்த்தப்பட்டிருக்கும் சிறுவர்களை விரைந்து தூக்கி கொண்டு ஆலயத்தை வலம் வந்தனர். சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு வழிபாடுகள் நடந்தது. இந்த நிகழ்ச்சியை காண அப்பகுதி முழுவதும் ஏராளமான பொதுமக்கள் கூடினர். திருவிழாவின் 5ம் நாளான இன்று முத்தாலம்மன்மஞ்சள் நீராட்டம் வாண வேடிக்கை கரகாட்டத்துடன் பூஞ்சோலையை சென்றடையும். இத்துடன் திருவிழா நிறைவுபெறும்.