Friday, June 28, 2024
Home » கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் குடித்து 43 பேர் மரணம் நீதி விசாரணைக்கு உத்தரவு: உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம்; முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் குடித்து 43 பேர் மரணம் நீதி விசாரணைக்கு உத்தரவு: உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம்; முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

by Karthik Yash

சென்னை: கள்ளக்குறிச்சியில் விஷசாராயம் குடித்து 43 பேர் பலியான சம்பவத்தில் முழுமையாக விசாரணை நடத்த நீதி விசாரணைக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். மேலும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சமும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோருக்கு தலா ரூ.50 ஆயிரம் நிவாரணம் வழங்கவும் முதல்வர் ஸ்டாலின் ஆணை பிறப்பித்துள்ளார். மேலும், இதற்கான அனைத்து காரணிகளை கண்டறியவும், எதிர்வரும் காலங்களில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க, எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அரசுக்கு ஆலோசனை வழங்க ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி பி.கோகுல்தாஸ் தலைமையில் ஒருநபர் ஆணையம் அமைக்க உத்தரவிட்டுள்ளார்.

தமிழக சட்டப்பேரவை கூட்டம் முடிந்ததும் நேற்று தலைமை செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மெத்தனால் கலந்த சாராயம் அருந்தியவர்கள் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக ஆய்வு கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் அமைச்சர்கள் துரைமுருகன், எ.வ.வேலு, உதயநிதி ஸ்டாலின், முத்துசாமி, மா.சுப்பிரமணியன், தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா, வளர்ச்சி ஆணையர் மற்றும் முதல்வரின் செயலாளர் முருகானந்தம், உள்துறை செயலாளர் அமுதா, தமிழக டிஜிபி சங்கர் ஜிவால், நிதித்துறை செயலாளர் உதயச்சந்திரன், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை செயலாளர் செந்தில்குமார் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டம் முடிந்ததும் முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பு: கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் காலனியில் மெத்தனால் கலந்த சாராயம் அருந்தியதால் 43 பேர் உயிரிழந்துள்ளனர் என்ற செய்தியை கேட்டு மிகவும் வேதனையும் அதிர்ச்சியும் அடைந்தேன். இந்த சம்பவத்தில் உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு சிறப்பு சிகிச்சை அளித்திட அறிவுறுத்தியுள்ளதோடு, பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து, ஆறுதல் தெரிவிக்க அமைச்சர்கள் எ.வ.வேலு, மா.சுப்பிரமணியன் ஆகியோர் நேற்று முன்தினம் அனுப்பி வைக்கப்பட்டனர். இதை தொடர்ந்து, மீண்டும் நேற்று அவர்களுடன் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சரும் கள்ளக்குறிச்சிக்கு சென்றுள்ளார்.

இதுவரை இச்சம்பவத்தில் விஷச்சாராய விற்பனையில் தொடர்புடைய நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், இதில் தீவிர விசாரணை மேற்கொண்டு, குறிப்பாக விஷச்சாராயம் தயாரிக்க மெத்தனாலை வழங்கியவர்களையும் கண்டறிந்து, அவர்கள் மீதும் மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இந்த சம்பவம் தொடர்பாக, சம்பந்தப்பட்ட காவல் துறை அலுவலர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதோடு, மாவட்ட ஆட்சி தலைவரும் பணியிட மாறுதல் செய்யப்பட்டுள்ளார். மேலும் இதுகுறித்து தீர விசாரிக்கவும், உரிய மேல்நடவடிக்கை எடுக்கும் பொருட்டும், இவ்வழக்கு சிபிசிஐடி வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இந்த சூழ்நிலையில், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சமும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன். இந்த சம்பவம் தொடர்பாக, நேற்று அமைச்சர்கள், தலைமை செயலாளர், உள்துறைச் செயலாளர், காவல் துறை இயக்குநர், கூடுதல் காவல்துறை இயக்குநர் (மதுவிலக்கு அமலாக்க பிரிவு), மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அலுவலர்கள், கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட அலுவலர்களுடன் கலந்தாலோசித்து, கீழ்க்கண்ட நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டுமென்று அவர்களுக்கு உத்தரவிட்டுள்ளேன்.

* மெத்தனால் கலந்த விஷச்சாராய உற்பத்தியிலும், விற்பனையிலும் ஈடுபட்ட அனைவரும் உடனடியாக கைது செய்யப்பட வேண்டுமென்றும், சம்பவத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள மெத்தனால் இருப்பை முழுமையாக கண்டறிந்து, அவற்றை கைப்பற்றி அழித்திடவும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென்றும் அறிவுறுத்தியுள்ளேன். மேலும், விஷச்சாராய உற்பத்திக்கு பயன்படுத்தப்பட்ட மெத்தனால் எங்கிருந்து கொண்டு வரப்பட்டது என்பதற்கான மூலகாரணத்தையும் காவல் துறையினர் கண்டுபிடிக்க வேண்டும்.

* மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறையை பொறுத்தவரையில், கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனை, பாண்டிச்சேரி ஜிப்மர் மருத்துவமனை, சேலம் மற்றும் விழுப்புரம் மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ள நபர்களின் உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட வேண்டுமென்றும், அங்கு அவர்களுக்கு தேவையான சிறப்பு சிகிச்சை வழங்கப்படுவது உறுதி செய்யப்பட வேண்டுமென்றும் அறிவுறுத்தியுள்ளேன்.

* உள்துறை செயலாளர் மற்றும் காவல் துறை இயக்குநர் ஆகியோர் கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு உடனடியாக சென்று, சம்பவம் குறித்து ஆய்வு மேற்கொண்டு அறிக்கை ஒன்றினை இரண்டு தினங்களில் வழங்க வேண்டும்.

* கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள இந்த சம்பவம் தொடர்பாக முழுமையான விசாரணை மேற்கொண்டு, இது நிகழ்ந்ததற்கான அனைத்து காரணிகளை கண்டறியவும், எதிர்வரும் காலங்களில் இதுபோன்ற சம்பவங்கள் தமிழ்நாட்டில் மீண்டும் நடைபெறாமல் இருக்க, மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அரசுக்கு ஆலோசனைகளை வழங்கிடவும், ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி பி.கோகுல்தாஸ் தலைமையில் ஒருநபர் ஆணையம் அமைத்திட உத்தரவிட்டுள்ளேன். இந்த ஆணையம் சம்பவம் குறித்து முழுமையாக விசாரித்து தனது பரிந்துரைகளை மூன்று மாதங்களுக்குள் அரசுக்கு வழங்கும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

* விஷச்சாராய விற்பனையில் தொடர்புடைய 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
* மெத்தனால் கலந்த விஷச்சாராய உற்பத்தியிலும், விற்பனையிலும் ஈடுபட்ட அனைவரையும் உடனடியாக கைது செய்ய உத்தரவு.
* ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி பி.கோகுல்தாஸ் தலைமையில் ஒருநபர் ஆணையம் விசாரணை.
* இதுபோன்ற சம்பவங்கள் தமிழ்நாட்டில் மீண்டும் நடைபெறாமல் இருக்க, மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அரசுக்கு 3 மாதத்தில் ஆணையம் அறிக்கை தரும்.

You may also like

Leave a Comment

one + eight =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi