கள்ளக்குறிச்சி விஷ சாராய விவகாரத்தில் 22 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ள நிலையில் மேலும் 2 பேர் கைது: சிபிசிஐடி போலீசார் அதிரடி

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி விஷ சாராய விவகாரத்தில் மேலும் இருவரை சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர். கள்ளக்குறிச்சி விஷ சாராய விவகாரத்தில் இதுவரை 66 நபர்கள் உயிரிழந்து உள்ள நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக சிபிசிஐடி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் மெத்தனால் கலந்த சாராய விற்பனையில் ஈடுபட்டவர்கள் மற்றும் மெத்தனால் சப்ளை செய்தவர்கள் உள்ளிட்ட 22 பேர் இதுவரை சிபிசிஐடி போலீசார் கைது செய்திருந்த நிலையில் இவர்கள் 22 பேரில் 11 பேரை சிபிசிஐடி போலீசார் கடந்த சில நாட்களுக்கு முன்னர் காவலில் எடுத்து விசாரணை மேற்கொண்ட போது சாராய வியாபாரி கோவிந்தராஜ் என்கின்ற கண்ணுக்குட்டி அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் அவருடன் இணைந்து மெத்தனால் கலந்த சாராய விற்பனையில் ஈடுபட்டு வந்த கருணாபுரம் பகுதியைச் சேர்ந்த கோவிந்தராஜ் என்கின்ற கண்ணுக்குட்டியின் உறவினர்களான பரமசிவம் மற்றும் முருகேசன் ஆகிய இருவரையும் சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர்.

இதன் மூலமாக கள்ளக்குறிச்சி விஷ சாராயம் விவகாரத்தில் சிபிசிஐடி போலீசாரால் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 24ஆக உயர்ந்துள்ளது. இந்த நிலையில் கைது செய்யப்பட்ட முருகேசன் மற்றும் பரமசிவம் இருவரையும் ஒருநாள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றத்தில் போலீசார் மனு அளித்திருந்த நிலையில் மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட நீதிபதி கைது செய்யப்பட்ட முருகேசன் மற்றும் பரமசிவம் ஆகிய இருவரையும் ஒரு நாள் நீதிமன்ற காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கி நீதிபதி ஸ்ரீராம் உத்தரவிட்டுள்ளார். தொடர்ந்து காவலில் எடுக்கப்பட்டுள்ள முருகேசன் மற்றும் பரமசிவம் ஆகிய இருவரிடமும் எங்கெங்கெல்லாம் சாராயம் விற்பனை செய்தனர் யார் யாருக்கெல்லாம் சாராயம் விற்பனை செய்தனர் உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொள்ள சிபிசிஐடி போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

Related posts

திருப்பூர் மாவட்டம் கொடுவாய் அருகே சொத்துத் தகராறில் துப்பக்கிச்சூடு: 2 பேர் உயிரிழப்பு

கல்வி, சமூக நலத்திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தும் மாநிலங்களுக்கு நிதி தர மறுப்பதா?: ஒன்றிய அரசுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

கொள்ளிடம் ஆற்றில் மூழ்கிய மேலும் ஒருவரின் உடல் மீட்பு