சென்னை: கள்ளக்குறிச்சி விஷ சாராய விவகாரத்தில் சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என தமிழ்நாடு எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தினார். பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்த பிறகு, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி நிருபர்களிடம் கூறியதாவது: எதிர்க்கட்சி என்ற அடிப்படையில் பேசுவதற்கான நேரம் கேட்டோம். ஆனால் சபாநாயகர் அனுமதி மறுத்துவிட்டார். கள்ளக்குறிச்சியில் 183 பேர் விஷசாராயம் குடித்து பாதிக்கப்பட்டனர். 55 பேர் உயிரிழந்தனர் என தெரியவந்துள்ளது. 183 பேர் பாதிக்கப்பட்டனர் என்றால் எவ்வளவு சாராயம் அங்கு விற்பனை செய்யப்பட்டது என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.
அமைச்சர் மா.சுப்பிரமணியன் தவறான கருத்துகளை தெரிவித்து வருகிறார். நான் கூறிய மருந்து வேறு, அவர் பதில் அளித்த மருந்து வேறு. மேலும் கள்ளச்சாராயம் குடித்தவர்கள் காலதாமதமாக வந்ததால்தான் உயிரிழப்பு ஏற்பட்டது என்று கூறுகிறார். இதற்கு அரசுதான் பொறுப்பேற்க வேண்டும். அரசு அறிவித்துள்ள ஒரு நபர் விசாரணை ஆணையத்தில் உண்மைகள் வெளிவராது. மெத்தனால் ஆந்திராவில் இருந்து வந்ததாக கூறுகிறார்கள். அதனால் இதில் சிபிசிஐடி விசாரணை நடத்த முடியாது. சிபிஐ அமைப்புதான் விசாரணை நடத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.