சென்னை: கள்ளக்குறிச்சி விஷ சாராய விவகாரத்தில் சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறினார். அதிமுக உறுப்பினர்கள் நேற்று பேரவையிலிருந்து வெளியேற்றப்பட் பின் அவைக்கு வெளியே எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி நிருபர்களிடம் கூறியதாவது: கள்ளக்குறிச்சி விஷச்சாராயம் குடித்து 50 பேர் உயிரிழந்ததாக தகவல் வந்திருக்கிறது. இது தொடர்பாக சட்டப்பேரவையில் பேசுவதற்காக பேரவையின் தலைவரிடம் கேட்டோம் அனுமதி மறுத்து வெளியே அனுப்பி விட்டார்கள். பேரவையில் இது தொடர்பாக பேச வாய்ப்பு கொடுக்கவில்லை, மக்களின் பிரச்னையை சட்டப் பேரவையில் பேசுவது எதிர்க்கட்சியான எங்களின் கடமை. ஏழை எளிய தாழ்த்தப்பட்ட ஆதிதிராவிடர் மக்கள் கள்ளச்சாராயம் குடித்து இறந்திருக்கிறார்கள்.
இதை எல்லாம் பேச வேண்டும் என்பதற்காக தான் சட்டப்பேரவையில் அனுமதி கேட்டோம். எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் தொடர்ந்து உள்ளே பேசுவதற்கு குரல் கொடுத்தார். அவரை தூக்கி கொண்டு வெளியே வந்து விட்டார்கள் அவரை கைது செய்யும் அளவிற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எதிர்க்கட்சிகளின் குரல் சட்டமன்றத்தில் ஒலிக்க வேண்டும். தமிழக அரசு அமைத்திருக்கும் விசாரணை ஆணையம் நேர்மையாக நடைபெறுமா என்று தெரியவில்லை. எனவே, இந்த விகாரத்தில் சிபிஐ விசாரணை வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.