*சுவாமிக்கு அபிஷேகம் செய்து வழிபாடு
கலசபாக்கம் : கலசபாக்கம் அருகே 4560 அடி உயரமுள்ள பர்வத மலையில் தொடர் விடுமுறையால் நேற்றும் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. சுவாமிக்கு தங்களது கரங்களால் பூஜை செய்து வழிபட்டனர் .கலசபாக்கம் அருகே தென் மகாதேவ மங்கலம் கிராமத்தில் 4560 அடி உயரமுள்ள பர்வத மலைக்கு தமிழகம் மற்றும் பல்வேறு மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் பவுர்ணமி, அமாவாசை, பிரதோஷம் உள்ளிட்ட விசேஷ தினங்களில் வருகை தந்து பூஜை செய்து வழிபடுவது வழக்கம். தற்போது இந்த நிலை மாறி வார இறுதி நாட்கள், விடுமுறை நாட்களிலும் அனைத்து தினங்களிலும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
கடந்த 21ம் தேதி ஆனி மாத பவுர்ணமியையொட்டி பக்தர்கள் மலையேறி சென்று சுவாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து நேற்று முன்தினம், நேற்றும் விடுமுறை என்பதால் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. பக்தர்கள் கொண்டு வந்த அபிஷேகப் பொருட்களை மலையின் உச்சிக்கு கொண்டு சென்று மல்லிகா அர்ஜுனேஸ்வரர், பிரம்மராம்பிகை அம்மனுக்கு தங்களது கரங்களால் பூஜை செய்து வழிபட்டனர்.