கலைஞர் மகளிர் உரிமைத்தொகை பெற விண்ணப்பித்த குடும்ப அட்டைதாரர்களின் வீடுகளுக்கே சென்று கள ஆய்வு செய்யும் பணி தொடங்கியது: தகுதியானவர்களின் பட்டியல் விரைவில் வெளியாகும் அதிகாரிகள் தகவல்

சென்னை: கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் மூலம் ரூ.1000 பெற விண்ணப்பித்தவர்களின் வீடுகளுக்கே சென்று கள ஆய்வு செய்யும் பணி தொடங்கியது. விரைவில் தகுதிவாய்ந்தவர்களின் பட்டியல் வெளியாக வாய்ப்புள்ளது. குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் செப்டம்பர் 15ம் தேதியில் இருந்து நடைமுறைக்கு வருகிறது. முதல்வர் மு.க.ஸ்டாலின் காஞ்சிபுரத்தில் திட்டத்தை தொடங்கி வைக்க உள்ளார். இதற்காக தமிழ்நாடு முழுவதும் மூன்று கட்டங்களாக 1 கோடியே 63 லட்சம் பெண்களிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டது.

தமிழ்நாடு முழுவதும் முகாம்களில் பெறப்பட்ட விண்ணப்பங்களில் அளிக்கப்பட்ட தகவல்கள் உண்மையானதா என கண்டறியவும், விடுபட்ட விவரங்களை விண்ணப்பதாரர்களிடம் கேட்டு பெறவும் அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக வீடு வீடாக சென்று கள ஆய்வு செய்யும் பணி நேற்று முதல் தொடங்கி உள்ளது. இதற்காக நியமிக்கப்பட்ட தன்னார்வலர்கள் மற்றும் கல்வித்துறையில் பணியாற்றும் ஊழியர்கள் வீடு வீடாக சென்று விண்ணப்பதாரர்களிடம் விசாரித்து வருகின்றனர். அப்போது, சொந்த வீடா? வாடகை வீடா? என்ன வேலை பார்க்கிறார்கள்? கார் இருக்கிறதா? மாத வருமானம் எவ்வளவு? மின்சார பயன்பாடு ஆண்டுக்கு 3600 யூனிட்டுக்குள் உள்ளதா? என கேட்கிறார்கள்.

பெரும்பாலான வீடுகளில் மின்சார பயன்பாடு பற்றி விண்ணப்பத்தில் குறிப்பிடப்படாமல் உள்ளதால் மின்சார யூனிட் எவ்வளவு உபயோகப்படுத்தி உள்ளனர் என்பதையும் நேரடியாக பார்க்கின்றனர். இதுபற்றி தமிழக அரசின் உயர் அதிகாரி கூறும்போது, ‘‘தகுதியான நபர்களுக்கு மாதம் ரூ.1000 வழங்குவதற்காகத்தான் வீடு வீடாக சென்று சரிபார்க்கும் பணி தொடங்கி உள்ளது. விண்ணப்பத்தை சரியாக பூர்த்தி செய்யாத விவரங்களை கேட்டு பெற்று பதிவு செய்யப்படுகிறது. இந்த தரவுகள் அனைத்தும் முழுமையாக கிடைத்ததும் இதற்கென உருவாக்கப்பட்டு உள்ள செயலி மூலம் ஒவ்வொரு விண்ணப்பமும் சரிபார்க்கப்படும். அதில் எந்தெந்த விண்ணப்பங்கள் தகுதிவாய்ந்த விண்ணப்பங்கள் என்பது தானாகவே தெரிந்துவிடும். அதன்மூலம் யார் யாருக்கு மாதம் ரூ.1000 வழங்கப்படும் என்பது குறித்து இந்த மாத இறுதியில் அல்லது செப்டம்பர் மாதம் முதல் வாரத்தில் அறிவிக்கப்படும்’’ என்றார்.

Related posts

தமிழ்நாட்டில் இரவு 7 மணிக்குள் 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.!!

உதகையில் இரண்டாவது சீசன்: அரசு தாவரவியல் பூங்காவில் சிறப்பு மலர் கண்காட்சி

தொழில்முனைவோர் மின்னணு மூலமாக சந்தைப்படுத்துதல் தொடர்பான விண்ணப்பங்கள் வரவேற்பு..!!