வாஷிங்டன்: காபூல் சர்வதேச விமான நிலையத்தில் நடந்த தற்கொலைப் படை தாக்குதலின் மூளையாக செயல்பட்ட ஐஎஸ்ஐஎஸ்-கே அமைப்பின் தலைவனை தலிபான் அரசு சுட்டுக் கொன்றது. கடந்த 2021ம் ஆண்டு ஆகஸ்ட் 26ம் தேதி ஆப்கானில் முகாமிட்டிருந்த அமெரிக்க துருப்புக்கள் வெளியேறின. அதனால் ஆப்கான் முழுவதும் தலிபான்களின் கட்டுக்குள் வந்தது. அப்போது காபூல் சர்வதேச விமான நிலையத்தில் நடந்த தற்கொலைப் படை தாக்குதலில் 13 அமெரிக்க வீரர்கள் மற்றும் ஏராளமான ெபாதுமக்கள் கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்தின் பின்னணியில் ஐஎஸ்ஐஎஸ்-கே என்று தீவிரவாத அமைப்பு இருந்தது உறுதி செய்யப்பட்டது.
ஐஎஸ் தீவிரவாத அமைப்பின் ஆப்கானிஸ்தான் துணை அமைப்பான ஐஎஸ்ஐஎஸ் – கே அமைப்பானது, தலிபான் அரசுக்கு எதிராக அவ்வப்போது தாக்குதல் நடவடிக்கையை மேற்கொண்டு வந்தது. இந்நிலையில் அமெரிக்க அரசின் வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் ஜான் கிர்பி அளித்த பேட்டியில், ‘காபூல் சர்வதேச விமான நிலையத்தில் நடந்த தற்கொலைப் படை தாக்குதலின் மூளையாக செயல்பட்ட ஐஎஸ்ஐஎஸ்-கே அமைப்பின் முக்கிய தலைவனை தலிபான் அரசு சுட்டுக் கொன்றது’ என்று தெரிவித்தார். ஆனால் ஐஎஸ்ஐஎஸ்-கே அமைப்பின் முக்கிய தலைவனின் பெயரை அவர் குறிப்பிடவில்லை.