இந்த நிலையில் மேற்கண்ட விவகாரம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தின் பதிவாளர் தரப்பில் இருந்து ஒரு அறிக்கை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், ‘‘தமிழ்நாட்டின் முன்னாள், இன்னாள் அமைச்சர்கள் மீதான வழக்குகளை தாமாக முன்வந்து விசாரணை நடத்துவதற்கு முன் அனுமதி கோரி தனி நீதிபதி ஆனந்த வெங்கடேஷ் 21.8.2023 அன்று கடிதம் எழுதி இருந்தார். ஆனால் அந்த கடிதத்தை 23.8.2023 அன்று பதிவாளர் அலுவலகம் தலைமை நீதிபதிக்கு அனுப்பி வைத்தது. அந்த கடிதத்தை 31.8.2023 அன்று தலைமை நீதிபதி பார்த்து விட்டார். அதே நேரத்தில் முன் அனுமதி கடிதத்தை தலைமை நீதிபதி பார்ப்பதற்கு முன்பாகவே தனி நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தனது வழக்கின் விசாரணையை தொடங்கிவிட்டார்’’ என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் கிரிமினல் வழக்கு விசாரணைகளை உயர் நீதிமன்றங்கள் நடத்துவது தொடர்பாகவும், தானாக முன்வந்து விசாரிப்பது தொடர்பாகவும் உச்ச நீதிமன்றத்தால் சில வழக்குகளில் வழிகாட்டுதல் நெறிமுறைகள் வழங்கப்பட்டு அவை குறித்து சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியால் கிரிமினல் குற்ற நடைமுறை குழுவிற்கு அனுப்பப்பட்டு அந்த குழுவும் தனது பரிந்துரைகளை தலைமை நீதிபதியிடம் கொடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.