ஒன்றிய அரசின் பட்ஜெட்டை கடந்த 23ம் தேதி நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். இதில் தமிழகம் கோரியிருந்த வெள்ள நிவாரண நிதி மற்றும் மெட்ரோ ரயில் திட்டம் உட்பட பல திட்டங்களுக்கு நிதி ஒதுக்கப்படவில்லை. மேலும், எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கும் உரிய நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை. அதே நேரத்தில் பாஜ அரசுக்கு ஆதரவளிக்கும் முதல்வர்கள் நிதிஷ்குமார், சந்திரபாபு நாயுடுவை திருப்திப்படுத்தும் வகையில், பீகாருக்கு ரூ.60 ஆயிரம் கோடி, ஆந்திராவுக்கு ரூ.15 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
குறிப்பாக, பீகாருக்கு வெள்ள நிவாரண நிதியாக ரூ.11,500 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. பேரிடரால் பெரும் பாதிப்படைந்த தமிழகத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் ரூ.37 ஆயிரம் கோடி நிவாரணம் கேட்டிருந்தார். ஆனால், பட்ஜெட்டில் இதற்கான நிதி ஒதுக்கப்படவில்லை. ஒன்றிய அரசின் இந்த பாரபட்ச நடவடிக்கைக்கு திமுக, காங்கிரஸ் உள்பட இந்தியா கூட்டணி கட்சிகள் கடும் எதிர்ப்பை நாடாளுமன்றத்தில் தெரிவித்தன.
பட்ஜெட்டில் தமிழகம் ஒட்டுமொத்தமாக புறக்கணிக்கப்பட்டதற்கான எதிர்ப்பை பதிவு செய்யும் வகையில், தான் பங்கேற்பதாக இருந்த நிதி ஆயோக் கூட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் ரத்து செய்தார். மேலும், டெல்லி, கேரளா, கர்நாடகா, புதுச்சேரி, தெலங்கானா, இமாச்சல பிரதேசம், பஞ்சாப் உட்பட 8 மாநிலங்களின் முதல்வர்கள் பிரதமர் மோடி தலைமையில் நேற்று நடந்த நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணித்தனர். அதே நேரம், மேற்கு வங்க மாநிலத்தின் நிலையை தெரிவிப்பதற்காக, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி இந்த கூட்டத்தில் பங்கேற்றார்.
ஆனால், கருத்து தெரிவிக்க வெறும் 5 நிமிடங்களே ஒதுக்கப்பட்ட நிலையில், மைக் ஆப் செய்யப்பட்டதை கண்டித்து மம்தா பானர்ஜி கூட்டத்தில் இருந்து வெளியேறி பரபரப்பை ஏற்படுத்தினார். இது எதிர்க்கட்சிகளின் குரல்வளையை நசுக்கும் செயல் என எதிர்க்கட்சியினர் கண்டனம் தெரிவித்துள்ளனர். மேலும், நேற்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மக்களுக்கு காணொலி வாயிலாக தனது கருத்துக்களை பதிவு செய்துள்ளார். அதில் அவர், ஒன்றிய பாஜ அரசு, தொடர்ச்சியாக தமிழ்நாட்டைப் புறக்கணித்து வருகிறது.
இது தமிழ்நாட்டைப் பழிவாங்கும் பட்ஜெட் மட்டுமல்ல; ஒட்டுமொத்த இந்திய நாட்டு மக்களையே பழிவாங்கும் பட்ஜெட் என்றும் கூறியுள்ளார். தமிழகத்திற்கான வெள்ள நிவாரண நிதி, சென்னையில் 2ம் கட்டம், மதுரை, கோவையில் மெட்ரோ ரயில் திட்டங்களுக்கும் நிதி ஒதுக்கீடு செய்யாத ஒன்றிய அரசுக்கு தனது கண்டனங்களை தெரிவித்துள்ளார். பட்ஜெட்டில் தமிழகம் புறக்கணிக்கப்பட்டதை கண்டித்து, மக்களின் ஒருமித்த குரலாக தமிழகம் முழுவதும் திமுக சார்பில் மாவட்ட தலைநகரங்களில் நேற்று பெருந்திரள் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
இதில் எம்பிக்கள், எம்எல்ஏக்கள் உள்பட பல்லாயிரக்கணக்கான தொண்டர்கள் பங்கேற்றனர். ஒன்றிய அரசை கண்டித்து கோஷம் எழுப்பியதோடு, தமிழக மக்கள் சார்பிலான எதிர்ப்பையும் ஒன்றிய அரசுக்கு வலுவாகவே வெளிப்படுத்தினர். காங்கிரஸ் சார்பில் நேற்று மாவட்டங்கள்தோறும் ஆர்ப்பாட்டம் நடந்தது. அடுத்தடுத்து எதிர்க்கட்சிகள் தரப்பிலும் போராட்டங்கள் நடைபெற உள்ளன.
தமிழகத்திற்கு தேவையான நலத்திட்டங்கள், நிதி ஒதுக்கீடு உள்ளிட்டவைகளை சட்டப்போராட்டம், பொதுவெளி போராட்டங்கள் மூலமாகவே பெற வேண்டிய நிலை இனியாவது மாற வேண்டும். வாக்களிக்காத மக்களுக்கும் நான் முதல்வர். நலத்திட்டங்கள் அனைவருக்கும் பொதுவானவையே என்ற முதல்வர் மு.க.ஸ்டாலின் பார்வையில் ஒன்றிய அரசு ஆட்சி செய்ய வேண்டுமென்பதே தமிழக மக்களின் எதிர்பார்ப்பாகும்.