கொல்கத்தா: மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ஆர்ஜி கர் அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவ கல்லூரியில் பயிற்சி மருத்துவராக இருந்த பெண் கடந்த ஆகஸ்ட் மாதம் 9ம் தேதி பலாத்காரம் செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்டார். பெண் மருத்துவரின் மரணத்துக்கு நீதி கேட்டும், மாநில அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் மருத்துவர்களுக்கு பாதுகாப்பை மேம்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் கடந்த 3ம் தேதி முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் இளநிலை பயிற்சி மருத்துவர்கள் நேற்று முதல் சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கி உள்ளனர்.
இந்நிலையில் ஆர்ஜி கர் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் பல்வேறு துறை தலைவர்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்துக்குப்பின் பல்வேறு துறைகளை சேர்ந்த 50 மூத்த மருத்துவர்கள் தங்கள் பணியை ராஜினாமா செய்துள்ளனர். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய மூத்த மருத்துவர்கள், “இது அரசாங்கத்துக்கோ, குறிப்பிட்ட அரசியல் கட்சிகளுக்கு எதிராவோ போராடாமல் பெண் மருத்துவரின் மரணத்துக்கு நீதி கேட்டு போராடும் இளநிலை பயிற்சி மருத்துவர்களுக்கு ஆதரவு தெரிவிப்பதற்காக நாங்கள் ராஜினாமா செய்துள்ளோம்” என்று தெரிவித்தனர்.