இதனை எதிர்த்து விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ராஜேஸ்தாஷ் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை நடைபெற்று வருகின்றன. இந்த வழக்கை வேறு மாவட்டத்துக்கு மாற்றக்கோரி சிறப்பு டிஜிபியின் மேல்முறையீட்டு மனுக்களை உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தன. மேலும், மார்ச் மாதத்துக்குள் வழக்கை முடிக்கவும் விசாரணை நீதிமன்றத்துக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்நிலையில் கடந்த 23ம் தேதி விழுப்புரம் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வந்தபோது, சிறப்பு டிஜிபி நேற்றைய தினம் நேரில் ஆஜராகி வாதத்தை தெரிவிக்கவும், இதுவே கடைசி வாய்ப்பு என்று நீதிபதி பூர்ணிமா உத்தரவிட்டார்.
அதன்படி நேற்று வழக்கு விசாரணைக்கு வந்தபோது சிறப்பு டிஜிபி நேரில் ஆஜரானார். தொடர்ந்து அவரது தரப்பு வழக்கறிஞர்கள், கள்ளக்குறிச்சி புதிய மாவட்ட அமர்வு நீதிமன்றம் திறக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு விசாரணை நடத்தக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் மீண்டும் மனுதாக்கல் செய்துள்ளதாகவும், அதன் மீதான முடிவு வரும் வரை அவகாசம் கேட்டனர். இதனை கேட்ட நீதிபதி, ‘ஏற்கனவே போதிய அவகாசம் கொடுக்கப்பட்டுவிட்டது. இனிமேலும் காலம் தாழ்த்த முடியாது. கடைசி வாய்ப்பாக நாளை (31ம் தேதி) சிறப்பு டிஜிபி வாதத்தை முன்வைக்காவிட்டால் வரும் பிப்ரவரி 3ம் தேதி மேல்முறையீட்டு வழக்கில் தீர்ப்பு வழங்கப்படும்’ என்று உத்தரவிட்டார்.