செங்கல்பட்டு: செங்கல்பட்டு மகிளா நீதிமன்ற நீதிபதியாக எழிலரசியும், அரசு தரப்பு சிறப்பு வழக்கறிஞராக சசிரேகா என்பவரும் பணியாற்றி வருகின்றனர். இருவரும் இணைந்து, கடந்த 5 மாதங்களில் பெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகளை தீவிரமாக விசாரித்து, 20க்கும் மேற்பட்ட வழக்குகளில் தீர்ப்பு வழங்குவதில் உறுதுணையாக இருந்துள்ளனர். இதுகுறித்து அரசு வழக்கறிஞர் சசிரேகா கூறுகையில், ஆண்கள் தவறான பழக்கங்களில் ஈடுபட கூடாது. தங்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகள் குறித்து பெண்கள் அச்சமின்றி காவல் நிலையங்களில் புகார் அளிக்க முன்வர வேண்டும்.
தங்களுக்கு ஏற்பட்டுள்ள பாலியல் தொல்லை குறித்து தங்களின் பெற்றோரிடம் சிறுமிகள் உள்பட இளம்பெண்கள் உடனடியாக தெரிவிக்க வேண்டும். குழந்தைகளின் முன்பு பெற்றோர் சண்டையிட கூடாது. பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க, இதுபோன்ற பல்வேறு விஷயங்களை பெற்றோர் உள்பட அனைவரும் கடைப்பிடிக்க வேண்டும்’ என்றார். இப்படி, ஒவ்வொரு வாரமும் நீதிபதி எழிலரசியும், அரசு பெண் வழக்கறிஞர் சசிரேகாவும் தீவிர விசாரணை நடத்தி, சம்பந்தப்பட்ட குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்குவதில் முனைப்பு காட்டி வருகின்றனர். இது அனைத்து தரப்பினரிடமும் வரவேற்பை பெற்று வருகிறது.