சென்னை: சந்திரயான் 3 வெற்றிகரமாக தரையிறங்கியது மகிழ்ச்சியின் சிறந்த தருணமாக உள்ளது என திட்ட இயக்குநர் வீரமுத்துவேல் தெரிவித்துள்ளார். சந்திரயான் 3 வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கியது. இதனை தொடர்ந்து இஸ்ரோ கட்டுப்பாட்டு மையத்தில் அத்திட்ட இயக்குநர்கள் நன்றி தெரிவித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். சந்திரயான் 3 திட்ட இயக்குநர் வீரமுத்துவேல்: சந்திரயான் 3 வெற்றிகரமாக தரையிறங்கியது மகிழ்ச்சியின் சிறந்த தருணமாக உள்ளது. திட்ட இயக்குநராக இந்த இலக்கை அடைந்தது திருப்திகரமாக உள்ளது. சந்திரயான் 3 நிலவில் ஏவப்பட்டது முதல் நிலவில் தரை இறங்கும் வரை அனைத்தும் நினைத்தது போல சரியான நேரத்தில் நடந்தது.
நிலவில் தரை இறங்கிய 4வது நாடாகவும், நிலவில் தென்துருவத்தில் இறங்கும் முதல் நாடாகவும் நாம் உள்ளோம். சந்திரயான் 3 செயல்பாட்டு மறுஆய்வுக் குழுவிற்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன், ஏனென்றால் நிலவில் ஏவப்பட்டது முதல் தற்போது தேர்ந்து எடுக்கப்பட்ட இடத்தில் தரை இறக்கப்பட்டதற்கு மறுஆய்வு செயல்முறை தான் காரணமாக உள்ளது. மேலும் இந்த திட்டம் வெற்றி அடைய உதவியாக இருந்த அனைத்து குழுவிற்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
திட்ட பணிகள் இயக்குநர் ஸ்ரீகாந்த்: இந்த திட்டத்திற்கு பங்காற்றியது மகிழ்ச்சியாக உள்ளது. சந்திரயான் 3 திட்டம் எந்த ஒரு தடையும் இல்லாமல் வெற்றி அடைய உதவியாக இருந்த அனைவருக்கும் நன்றி.
இணை இயக்குனர் கல்பனா: சந்திரயான் 3 வெற்றி, நம் அனைவருக்கும் மறக்க முடியாத மற்றும் மகிழ்ச்சியான தருணமாக இருக்கும். சந்திரயான் 2 அனுபவத்திற்குப் பிறகு விண்கலத்தை மீண்டும் புனரமைத்த நாளிலிருந்து எங்கள் இலக்கை குறைபாடற்ற முறையில் அடைந்துவிட்டோம். இஸ்ரோ இயக்குனரின் ஆதரவுடன் எங்கள் குழுவின் மகத்தான முயற்சியே இந்த வெற்றிக்கு காரணம். அதுமட்டுமின்றி இந்த திட்டத்திற்கு உதவிய அனைவருக்கும் நன்றியை தெரிவித்துகொள்கிறேன்.