*அதிகாரிகள் நடவடிக்கைக்கு கோரிக்கை
ஜோலார்பேட்டை : ஜோலார்பேட்டை அடுத்த பாச்சல் ஊராட்சிக்குட்பட்ட அசோக் நகர் பகுதியில் உள்ள வட்டார வளர்ச்சி அலுவலகம் பின்புறத்தில் புளியங்கொட்டை பகுதிக்கு செல்லும் பிரதான சாலை உள்ளது. இந்த சாலை வழியாக பல்வேறு கிராமப் பகுதிக்கு செல்லும் பொதுமக்கள் திருப்பத்தூர் பகுதிக்கு வரும் பள்ளி கல்லூரி மாணவர்கள் பயணித்து வருகின்றனர். இந்த சாலை ஓரத்தில் குப்பை கழிவுகள் மலை போல் குவிந்து அகற்றப்படாமல் உள்ளது.
இதனால் குப்பை கழிவுகளால் துர்நாற்றம் வீசி சுகாதார சீர்கேடு ஏற்பட்டு, அவ்வழியாக செல்லும் பொதுமக்கள் மற்றும் பள்ளி கல்லூரி மாணவர்கள் துர்நாற்றத்தால் மூக்கை பிடித்தபடி செல்கின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை மேற்கொண்டு சாலையோரத்தில் கொட்டப்பட்டுள்ள குப்பை கழிவுகளை அகற்றி சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.