வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிடும் அதிபர் ஜோ பைடனுக்கு மூளை பாதிப்பு நோய் இருப்பதாகவும் ஆனால் இதை ஊடகங்கள் திட்டமிட்டு மறைப்பதாகவும் புகார் எழுந்துள்ளது. வரும் நவம்பர் மாதம் நடைபெற உள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளரான முன்னாள் அதிபர் டோனல் டிரம்ப்க்கு எதிராக ஜனநாயக கட்சியை சேர்ந்த அதிபர் ஜோ பைடன் மீண்டும் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். ஆனால் கடந்த வாரம் அட்லாண்டாவில் நடைபெற்ற டோனல் டிரம்ப் உடனான நேரடி விவாதத்தில் ஜோ பைடனின் வாய் குலரல் மற்றும் தடுமாற்றங்கள் சொந்த கட்சியினரையே கவலை அடைய வைத்துள்ளன.
இந்நிலையில் அவருக்கு டிமெண்டியா எனப்படும் மறதி நோய் அல்லது மூளை பாதிப்பு நோய் இருப்பதாகவும் இதை ஊடகங்கள் மறைத்து விட்டதாகவும் பாஃக்ஸ் நியூஸ் செய்தி நிறுவனத்தின் முன்னாள் ஆசிரியர் பரபரப்பு குற்றசாட்டை முன்வைத்துள்ளார். பைடனுக்கு பதிலாக தற்போது துணை அதிபராக உள்ள இந்திய ஆப்ரிக்க வம்சாவளியை சேர்ந்த கமலா ஹாரிஸை வேட்பாளராக நிறுத்துமாறு அவரை வலியுறுத்தியுள்ளார். இதே கருத்தை ஜனநாயக கட்சியின் மூத்த எம்.பியம் முன்வைத்துள்ளார். இதற்கிடையே அமெரிக்காவின் சி.என்.என் செய்தி நிறுவனம் நடத்திய வாக்கெடுப்பில் ஜோ பைடனை விட கமலா ஹரிசுக்கே பெரும்பாலானோர் வாக்களித்துள்ளனர்.