Sunday, October 6, 2024
Home » அண்ணா பல்கலையில் 161 பேருக்கு வேலை: முதல்வர் மு.க.ஸ்டாலின் நியமன ஆணை வழங்கினார்

அண்ணா பல்கலையில் 161 பேருக்கு வேலை: முதல்வர் மு.க.ஸ்டாலின் நியமன ஆணை வழங்கினார்

by Ranjith

சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நேற்று தலைமைச் செயலகத்தில் உயர்கல்வித் துறை சார்பில் அண்ணா பல்கலைக்கழகத்தில் உதவி பேராசிரியர்கள், இணை பேராசிரியர்கள், பேராசிரியர்கள் மற்றும் பிற பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்ட 161 நபர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக 10 நபர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கினார்.

தமிழ்நாட்டில் உயர்கல்வியை மேம்படுத்தும் நோக்கில், அதிக எண்ணிக்கையிலான உயர்கல்வி நிறுவனங்களை தொடங்குதல், அதன் வாயிலாக ஆராய்ச்சி, புதுமைப்படைப்புகள், தொழில்நுட்ப வளர்ச்சி ஆகியவற்றில் மாணவர்களின் திறன்களை வளர்த்து, வேலைவாய்ப்பினை உறுதி செய்தல், தகுதிவாய்ந்த திறன்மிகு இளைஞர்களை உருவாக்குதல், அரசுப் பள்ளிகளில் ஆறாம் வகுப்பு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரை படித்த மாணவிகள் உயர் கல்வியை பயில்வதற்கு புதுமைப் பெண் திட்டத்தின் கீழ் மாதம் ரூ.1000/- உதவித் தொகை வழங்குதல், முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு சலுகைகள், கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல், காலிப் பணியிடங்களை நிரப்புதல் போன்ற பல்வேறு திட்டங்களை தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருவதால் அகில இந்திய அளவில் உயர்கல்வி சேர்க்கையில் தமிழ்நாடு முதலிடம் வகித்து வருகிறது.

அந்த வகையில், அண்ணா பல்கலைக்கழகத்தின் கிண்டி பொறியியல் கல்லூரி, எம்.ஐ.டி. கல்லூரி, அழகப்பா செட்டியார் தொழில்நுட்ப கல்லூரி மற்றும் கட்டிடக்கலை மற்றும் திட்டமிடல் பள்ளி ஆகிய நான்கு கல்லூரிகளிலும் காலியாக உள்ள உதவி பேராசிரியர்கள், இணை பேராசிரியர்கள், பேராசிரியர்கள் மற்றும் உடற்கல்வி துணை இயக்குநர், துணை நூலகர் போன்ற பிற பணியாளர் பணியிடங்களுக்கு எட்டு ஆண்டுகளுக்கு பிறகு வெளிப்படைத் தன்மையுடன் தேர்வு குழுக்களால் தேர்வு செய்யப்பட்ட 161 நபர்களுக்கு 20.04.2023 அன்று நடைபெற்ற கூட்டத்தில் அண்ணா பல்கலைக்கழக ஆட்சி மன்றக் குழு ஒப்புதல் அளித்துள்ளது.

தேர்வு செய்யப்பட்ட 161 உதவி பேராசிரியர்கள், இணை பேராசிரியர்கள், பேராசிரியர்கள் மற்றும் பிற பணியாளர் பணியிடங்களுக்கு பணிநியமன ஆணைகள் வழங்கிடும் அடையாளமாக தமிழ்நாடு முதலமைச்சரால் நேற்றைய தினம் 10 நபர்களுக்கு பணிநியமன ஆணைகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில், உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி, தலைமைச் செயலாளர் இறையன்பு, உயர்கல்வித் துறை முதன்மைச் செயலாளர் கார்த்திகேயன், உயர்கல்வித் துறை கூடுதல் செயலாளர் பழனிசாமி, அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் வேல்ராஜ், பணியமர்த்தல் பிரிவு இயக்குநர் முனைவர் பிரகாஷ் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

You may also like

Leave a Comment

3 × 5 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi