தர்மபுரி: தர்மபுரி அருகே வேலை வாங்கி தருவதாக கூறி அழைத்து வந்த வெளி மாநிலத்தைச் சேர்ந்த இளம்பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த 2 பேரை போலீசார் கைது செய்து, புரோக்கராக செயல்பட்ட பெண்ணை தேடி வருகின்றனர். தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே பெரியாம்பட்டி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஒரு லாட்ஜில் பெண்களை வைத்து பாலியல் தொழில் நடந்து வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன்பேரில், காரிமங்கலம் போலீசார் லாட்ஜிக்கு விரைந்தனர். அப்போது, அங்குள்ள ஒரு அறையில் பெண் ஒருவரை அடைத்து வைத்திருந்தது தெரியவந்தது. அவருக்கு 2 வாலிபர்கள் பாலியல் தொந்தரவு கொடுத்து கொண்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து, அவர்களை பிடித்து போலீசார் விசாரணை செய்ததில், 32 வயதான அந்த பெண் கொல்கத்தாவை சேர்ந்தவர் என்பதும், வேலை வாங்கித் தருவதாக கூறி அவரை அழைத்து வந்து, கிருஷ்ணகிரியைச் சேர்ந்த பிரபு என்பவரது மனைவி சுந்தரி (32) லாட்ஜில் விட்டுச் சென்றதும் தெரியவந்தது. இதையடுத்து, லாட்ஜில் இருந்த காரிமங்கலம் அண்ணா நகரை சேர்ந்த சரவணன் (34) மற்றும் புலிக்கரையைச் சேர்ந்த நவீன்குமார்(25) ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிந்து இருவரையும் கைது செய்தனர். தொடர்ந்து, தலைமறைவாக உள்ள புரோக்கர் சுந்தரியை தேடி வருகின்றனர்.