புதுடெல்லி: நீட் வினாத்தாள் வெளியான வழக்கில் ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த முதலாம் ஆண்டு மருத்துவமாணவரை சிபிஐ அதிகாரிகள் அதிரடியாக கைது செய்தனர். இந்த ஆண்டு நடந்த இளங்கலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வில் வினாத்தாள் வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக சிபிஐ 6 வழக்குகளை பதிவு செய்து பீகார், குஜராத், ஜார்க்கண்ட், உபி மாநிலங்களை சேர்ந்த 14 பேரை கைது செய்துள்ளது.
நேற்று முன்தினம் பீகார் மாநிலம் பாட்னா எய்ம்ஸ் மருத்துவ மாணவர்கள் 4 பேர் கைது செய்யப்பட்டனர். இதையடுத்து சிபிஐ கைது எண்ணிக்கை 18ஆக உயர்ந்தது. இந்த நிலையில் நேற்று ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் உள்ள ராஜேந்திரா மருத்துவ அறிவியல் கழகத்தின் முதலாம் ஆண்டு எம்பிபிஎஸ் மாணவர் சுரபி குமார் என்பவரை சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர். நீட் கேள்வித்தாளை திருடிய ஹசாரிபாக்கை சேர்ந்த பங்கஜ்குமாருக்கு விடைகளை எழுதி கொடுக்க சுரபிகுமார் உதவியதாக சிபிஐ அதிகாரிகள் தெரிவித்தனர்.