நாகர்கோவில்: நாகர்கோவில் பகுதியை சேர்ந்தவர் நாகராஜன் (40). பைனான்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறார். இவரிடம் குமரி மேற்கு மாவட்ட பகுதியை சேர்ந்த பெண் ஒருவர், 95 பவுன் தங்க நகைகளை 2 மாதங்களுக்கு முன் அடகு வைத்ததாக கூறப்படுகிறது. கடந்த சில நாட்களுக்கு முன் அந்த பெண், நாகராஜனை தொடர்பு கொண்டார். தன்னிடம் ரூ.45 லட்சம் பணம் தயாராக இருக்கிறது என கூறி, சுசீந்திரம் அருகே உள்ள, நண்பரின் அலுவலகத்துக்கு தனது நகைகளுடன் வருமாறு கூறி உள்ளார்.
இதை நம்பி, தங்க நகைகளுடன் நாகராஜன் சென்றுள்ளார். அப்போது அங்கு அந்த பெண் உள்பட 6 பேர் இருந்துள்ளனர். நாகராஜனை பார்த்ததும் அவரிடம் இருந்த தங்க நகைகளை பறித்த கும்பல், கை துப்பாக்கியை காட்டி மிரட்டி உள்ளது. இதனால் உயிருக்கு பயந்து வெளியே வந்த நாகராஜன், சுசீந்திரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.