ஸ்ரீபெரும்புதூர்: ஸ்ரீபெரும்புதூர் அருகே முனீஸ்வரர் கோயிலின் பூட்டை உடைத்து பணம், நகை ஆகியவற்றை திருடிச்சென்ற மர்ம நபர்களை, போலீசார் தேடி வருகின்றனர். ஸ்ரீபெரும்புதூர் அருகே ஒரகடம், பனப்பாக்கம் கிராமத்தில் ஸ்ரீ பால்முனீஸ்வரர் கோயில் உள்ளது. இக்கோயிலில், அதே பகுதியை சேர்ந்த பாலாஜி பூசாரியாக உள்ளார். இவர், வழக்கம்போல் நேற்று காலை 5:30 மணிக்கு கோயிலுக்கு சென்றார். அப்போது, கோயில் கேட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
பின்னர், கோயிலின் உள்ளே சென்று பார்த்தபோது, உண்டியல் மற்றும் பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்து ரூ.20 ஆயிரம், 2 சவரன் செயின், வெள்ளி கிரிடம் ஆகியவை திருடப்பட்டிருந்தது. இதுகுறித்து, ஒரகடம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து, திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.