இதனிடையில் சொத்து குவிப்பு வழக்கில் பறிமுதல் செய்யப்பட்டு கர்நாடக மாநிலத்தின் அரசு கருவூலத்தில் வைக்கப்பட்டுள்ள ஜெயலலிதாவின் தங்கம், வெள்ளி, வைரம், வைடூரியம் ஆகிய நகைகளை மார்ச் 6 மற்றும் 7ம் தேதிகளில் தமிழ்நாடு அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என்று பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதி மோகன் கடந்த பிப்ரவரி 19ம் தேதி உத்தரவிட்டார்.
இந்நிலையில் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் ஜெயலலிதாவின் வாரிசுகளான தீபக் மற்றும் தீபா ஆகியோர் சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவிடம் பறிமுதல் செய்த தங்க ஆபரணங்களை தமிழ்நாடு அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என்று பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் அந்த ஆபரணங்களை வாரிசுகளான தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று மனு தாக்கல் செய்தனர்.
அம்மனு நேற்று உயர்நீதிமன்றத்தில் நீதிபதி நவாஸ் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. தீபா மற்றும் தீபக் சார்பில் நீதிமன்றத்தில் ஆஜராகிய வக்கீல் சத்தியகுமார், சொத்து குவிப்பு வழக்கில் இறுதி தீர்ப்பு வருவதற்கு முன்பாகவே ஜெயலலிதா இறந்து விட்டார். ஆகையால் இறுதி தீர்ப்பில் அவர் விடுவிக்கப்பட்டார். அவருடைய சொத்துக்கள் அனைத்தும் அவரது வாரிசுகளுக்கு மட்டுமே சாரும் அதை ஏலம் விடும் அதிகாரம் நீதிமன்றத்திற்கு கிடையாது என்று வாதிட்டார். இந்த மனுவை விசாரணைக்கு ஏற்று கொண்ட நீதிபதி, ஜெயலலிதாவின் நகைகளை தமிழ்நாடு அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என்று பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு தற்காலிக தடை விதித்தும், அரசு தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய கால அவகாசம் வழங்கியும் அடுத்த விசாரணையை மார்ச் 26ம் தேதிக்கு நீதிபதி ஒத்தி வைத்தார்.