சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சென்னையில் நேற்று அளித்த பேட்டி: அதிமுக கொடி, சின்னம் அதிமுகவிற்கு சொந்தமானது. இனிமேல் இவற்றை ஓபிஎஸ் தரப்பினர் பயன்படுத்த கூடாது. அப்படி பயன்படுத்தினால் அது போர்ஜரி ஆகும். அதற்காக சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். கொரோனா காரணமாக கொடநாடு வழக்கு தாமதமானது.
தீர்ப்பு வழங்கக்கூடிய நிலையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. இந்த வழக்கு நேர்மையாக நடைபெற வேண்டும் என்பதற்காகத்தான் சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று சட்டமன்றத்தில் எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பேசினார். டெட்ரா பேக்கில் மது விற்கப்படும் என்கிறார்கள். இது ஒரு விபரீதமான வேலை. ஒரு மாற்றத்தினை சிந்தித்தால் நல்லது. இவ்வாறு அவர் கூறினார்.