திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே.பேட்டைக்கு அருகே இருக்கிறது வீராணத்தூர் கிராமம். எந்தப் பக்கம் திரும்பினாலும் பச்சை பசேலெனக் காட்சி அளிக்கின்றன இந்த ஊரின் வயல்கள். அந்த வயல்களில் சுறுசுறுப்பாக பயிர்களுக்கு பராமரிப்பு பணிகளில் ஈடுபட்டபடி இருக்கிறார்கள் விவசாயிகள். பட்டத்திற்கு தகுந்தபடியும், பருவத்திற்கு ஏற்றபடியும் நெல், கரும்பு என பல பயிர்களை விவசாயம் செய்து வருகிறார்கள். ஆனால் நெல் பயிர்தான் இவர்களுக்கு பிரதானம். அதற்கு அடுத்த இடத்தில் மல்லிகையை வைத்திருக்கிறார்கள். நெல்லைப் போலவே மல்லிகை சாகுபடியை பெரிய அளவில் செய்து வருகிறார்கள். மல்லிகை சாகுபடியில் வீராணத்தூர் கிராமத்திற்கு முன்னோடியாக இருக்கும் ராஜேந்திரன் என்ற விவசாயியை ஒரு அதிகாலைப்பொழுதில் சந்தித்தோம். தனது மல்லிகைத் தோட்டத்தில் பூக்களைப் பறித்துக் கொண்டிருந்த ராஜேந்திரன் புன்னகையோடு நம்மை வரவேற்றுப் பேசினார்.
“ நாங்கள் பல தலைமுறைகளாக விவசாயத்தில் ஈடுபட்டு வருகிறோம். எனது அப்பா கம்பு, கேழ்வரகு, குதிரைவாலி, தினை என பலதரபட்ட சிறுதானியப் பயிர்களை சுழற்சி முறையில் சாகுபடி செய்வார். அவருக்குத் துணையாக 8 வயதில் நானும் விவசாயத்திற்கு வந்தேன். அவருடன் எல்லா வேலைகளையும் செய்வேன். இப்போது வரை எனக்கும் விவசாயம்தான் தொழிலாக இருக்கிறது. எங்களது நல்லது, கெட்டது என எதுவாக இருந்தாலும் அது விவசாயத்தோடுதான் இருக்கும். விவசாயத் தொழிலில் எனக்கு 40 ஆண்டு அனுபவம் இருக்கிறது. எங்கள் விளைநிலத்தை நாங்கள் வெறுமனே போடுவதே கிடையாது. எல்லாப் பருவத்திலும் ஏதாவது ஒரு பயிரை எங்கள் நிலத்தில் சாகுபடி செய்தபடி இருப்போம். நெல் சாகுபடி செய்வதற்கென்றே 10 ஏக்கர் நிலத்தை ஒதுக்கி வைத்திருக்கிறோம். அதில் எப்போதும் நெல் விவசாயம்தான் நடக்கும். அதில் விளையும் நெல்லை வேளாண் துறைக்கு விதை நெல்லுக்காக வழங்கி வருகிறோம். அதுபோக கூடுதலாக 2.1/2 ஏக்கரில் பூ சாகுபடி செய்து வருகிறேன். அரை ஏக்கரில் முல்லை பயிரிட்டு இருக்கிறேன். 2 ஏக்கரில் மல்லிகை பயிரிட்டு இருக்கிறேன். இது மல்லிகைக்கான சீசன் என்பதால் மல்லிகை விவசாயத்தை மும்முரமாக செய்து வருகிறேன்’’ என தனது விவசாய அனுபவம் குறித்து சுருக்கமாக கூறிய ராஜேந்திரனிடம் மல்லிகை சாகுபடி விவரம் குறித்து கேட்டோம்.
“நாங்கள் காலை எழுந்தவுடன் மல்லிகை செடிகளில்தான் கண் விழிப்போம். வயலுக்கு என்று வந்துவிட்டால் மல்லிகைப்பூக்களைப் பறிப்பதும், அதற்கு பராமரிப்பு வேலைகளை செய்வதும்தான் எங்களுக்கு முதல் வேலை. மல்லிகைப்பூவிற்கு எல்லா மாதமும் மவுசு என்றாலும் இந்த கோடைக் காலத்தின் ஆரம்பத்தில் மல்லிகைக்கு விலை அதிகமாக கிடைக்கும். இந்த சமயத்தில் ஒரு கிலோ பூவின் விலை ரூ.2000 வரை கூட செல்லும். இதனால், இந்தப் பருவத்தில் மல்லிகைக்குதான் முக்கியம் கொடுப்போம். என்னிடம் 2 ஏக்கர் முழுக்க மல்லிகைச் செடிகள் நிறைந்து இருக்கின்றன. இவை அனைத்துமே 10 வயது செடிகள். ராமேஸ்வரம், தங்கச்சிமடத்தில் இருந்து மல்லிகை நாற்றுகளை வரவழைத்து, இந்த மல்லிகைத் தோட்டத்தை உருவாக்கி இருக்கிறேன். ராமேஸ்வரத்தில் கிடைக்கும் மல்லிகை நாற்றுகள் தரமானவை. அந்த ஊர் மண்ணில் இருக்கிற சத்துக்கள் மல்லிகைச் செடிகளுக்கு உகந்தது என்பதால், இயற்கையிலே நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருக்கும்.
இதனால் அந்த ஊரில் இருந்து தாய்ச்செடிகளைக் கொண்டுவந்தேன். அந்தச் செடிகளில் இருந்துதான் இப்போது பூக்களைப் பறித்து வருமானம் பார்க்கிறேன்.மல்லிகைச் செடிகளுக்கு பராமரிப்பு என்பது குறைவாக இருந்தாலும் அதை சரியான நேரத்தில், சரியான பருவத்தில் செய்ய வேண்டும். இல்லையென்றால் எளிதில் நோய்த் தாக்குதல் வந்துவிடும். வருடம் முழுவதுமே செடிகளில் இருந்து பூ பறிக்கலாம் என்றாலும், குளிர்காலத்திற்குப் பிறகு வருகிற இந்த 4 மாத கோடைக்காலங்களில் பூ அதிகமாக கிடைக்கும். இந்த 4 மாதங்களில் பூ சாகுபடி செய்வதற்கு டிசம்பர் கடைசி அல்லது ஜனவரி முதல் வாரங்களில் மல்லிகைச் செடிகளை கவாத்து செய்ய வேண்டும். கவாத்து என்றால், மல்லிகைச் செடிகளில் இருக்கிற இலைகள் அனைத்தையும் பறித்துவிட்டு தேவையில்லாத கிளைகளையும் நீக்கிவிட்டு செடிகளை நன்றாக வெயிலில் காய விட வேண்டும். கவாத்து முடித்து வெயிலில் காய்கிற செடிகளுக்கு அதன்பின் தண்ணீர் விட வேண்டும். அப்போதுதான் நன்றாக பக்கக் கிளைகள் வெடித்து மொட்டுகள் வைக்கத் தொடங்கும். குளிர்காலம் முடிந்து கோடை பிறப்பதால் இந்தப் பருவ மாற்றத்தில் செடிகள் நன்றாக வளரத் தொடங்கும்.
மல்லிகை சீசனின் தொடக்க நாட்களில் பூக்கள் குறைவாக பூக்கத் தொடங்கும். சில நாட்கள் கழிந்து செடி முழுவதும் பூவாகத்தான் இருக்கும். பூ பறிப்பதற்கே அதிக ஆட்கள் தேவைப்படும். ஒரு செடியில் மட்டுமே 200 கிராம் வரை பூ எடுக்கும் அளவிற்கு பூக்கள் அதிகமாக இருக்கும். மல்லிகைப்பூவின் விளைச்சலைப் பொருத்து அதன் விலை கூடுதலாகவும், குறைவாகவும் இருக்கும். அதேபோல முகூர்த்த நாட்களில், கோயில் விசேஷ நாட்களில் பூவின் விலை கூடுதலாக இருக்கும். இப்பொழுதெல்லாம் விலை ரூ.1500 வரை இருக்கிறது. இப்போதுதான் பூவின் சீசன் தொடங்கி இருக்கிறது. எனது தோட்டத்தில் 7 கிலோ வரை மல்லிகை கிடைத்திருக்கிறது. இன்னும் சில நாட்களில் அதிகமாக கிடைக்கும். ஒரு நாளைக்கு 100 கிலோவிற்கு மேல் கூட பூக்கள் மகசூலாக கிடைக்கும். கடந்த வருடம் ஒரே நாளில் 150 கிலோ வரை மகசூல் எடுத்திருக்கிறேன். பூக்கள் அதிகம் வரும் நாட்களில், நாள் முழுக்க பூப்பறிக்க ஆட்கள் தோட்டத்தில் இருப்பார்கள். அப்போது எங்கள் வயலில் திருவிழாக்கோலமாக இருக்கும். சீசன் சமயங்களில் வாரத்திற்கு சுமார் 10 ஆயிரம் வரை செலவுகள் போக லாபம் கிடைக்கும். மாதத்திற்கு சாதாரணமாக ரூ.40 ஆயிரம் வரை லாபம் பார்க்கலாம். மற்ற நாட்களிலும் குறிப்பிட்ட அளவில் லாபம் பார்க்கலாம். இதில் தினசரி ஏதாவது ஒரு தொகை வருமானமாக வந்துகொண்டே இருக்கும்.
எங்கள் ஊர் மண்ணில் ஈரப்பதம் அதிகமாக இருப்பதால் வாரத்திற்கு ஒருமுறை நீர் பாய்ச்சினாலே போதும். உரம் எனப் பார்த்தால் மொட்டு கட்டுவதற்காக மட்டும் உரம் கொடுப்போம். தினமும் பறிக்கப்படுகிற பூக்கள் அனைத்தையும் சென்னை பேரீஸில் இருக்கிற மல்லிகைப் பூ வியாபாரிகளுக்கு அனுப்பி விடுவேன். சில சமயம் நானே சென்னைக்கு எடுத்துச்சென்று விடுவேன். இப்போது சேலம், வேலூர் பகுதிகளில் இருக்கிற பூ வியாபாரிகளுக்கு பேருந்து மூலம் அனுப்பி வைக்கிறேன். மல்லிகைச் செடிகளைப் பொருத்தவரை ஒருமுறை நடவு செய்தால் போதும், 20 வருடங்கள் வரை பூக்கள் பறிக்கலாம். இன்னும் சிலர் இந்த மல்லிகைச் செடிகளில் இருந்தே மல்லிகை நாற்றுகள் உற்பத்தி செய்து விற்பனை செய்கிறார்கள். பூ சாகுபடியைப் பொருத்தவரை மல்லிகை நல்ல வருமானம் தரக்கூடிய தொழில். எல்லா மண்ணிலும் வளரக்கூடியது. பராமரிப்புச் செலவும் குறைவு என்பதால் விவசாயிகள் தாராளமாக மல்லிகை செடிகளை வளர்க்கலாம்’’ மல்லிகைக்கு நற்சான்றிதழ் வழங்குகிறார்.
தொடர்புக்கு
ராஜேந்திரன் – 97875 12968.