காற்று மாசை கட்டுப்படுத்துவதற்காக ஜனவரி 1ம் தேதி வரை அனைத்து வகை பட்டாசுகளுக்கும் டெல்லி அரசு தடை விதிப்பு

டெல்லி: காற்று மாசை கட்டுப்படுத்துவதற்காக ஜனவரி 1 வரை அனைத்து வகை பட்டாசுகளுக்கும் டெல்லி அரசு தடை விதித்துள்ளது. டெல்லியை சுற்றியுள்ள பகுதிகளில் வேளாண் கழிவுகளை எரிபதால் தலைநகரில் கடும் காற்று மாசுபாடு ஏற்பட்டது. கடந்த ஆண்டை போல் இவ்வாண்டும் அனைத்து வகையான பட்டாசுகளுக்கு தடை விதிக்கப்படுகிறது. ஆன்லைன் மூலம் பட்டாசு விற்கவும் தடை விதிப்பதாக டெல்லி சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கோபால் ராய் அறிவித்துள்ளார்.

டெல்லியில் தொடர்ந்து காற்று மாசு என்பது இருந்து வருகிறது. இதனால் பல தரப்பட்ட மக்கள் பாதிப்படைகின்றனர். குறிப்பாக தீபாவளி சமயங்களில், பட்டாசு வெடிப்பதன் காரணமாக அதிகளவு காற்றானது மாசடைகிறது. இந்நிலையில், அக்காற்று மாசை கட்டுப்படுத்த டெல்லி அரசு பட்டாசு உற்பத்தி மற்றும் விற்பனைக்கு தடைவிதித்து உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து டெல்லி சுற்றுச்சூழல் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தில்லியில் ஏற்பட்டுள்ள காற்று மாசு காரணமாக பட்டாசு உற்பத்தி மற்றும் விற்பனைக்குத் தடை விதிக்கப்படுகிறது. ஆன்லைனில் பட்டாசு விற்பனைக்கும் இந்த உத்தரவு பொருந்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தடை உத்தரவைக் கடுமையாக பின்பற்ற டெல்லி காவல்துறை, மாசு கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் வருவாய்த்துறை ஆகியோருடன் இணைந்து செயல் திட்டங்கள் வகுக்கப்படும். இது காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்த 21 முக்கிய அம்சங்களை அடிப்படையாகக் கொண்ட டெல்லி அரசின் குளிர்கால நடவடிக்கை திட்டத்தின் ஒரு பகுதியாகும் என அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

மேலும், பட்டாசுகள் உற்பத்தி, விற்பனை, சேமிப்பு மற்றும் பயன்பாடு போன்றவற்றிற்கானத் தடை வருகிற ஜனவரி 1, 2025 வரை அமலில் இருக்கும் என்றும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts

மதுரையில் தனியார் மகளிர் விடுதியில் தீ விபத்து: உயிரிழந்தோர் எண்ணிக்கை 3ஆக உயர்வு!!

போலி பத்திரப்பதிவை தடுக்க கூடுதல் பாதுகாப்புடன் ரேகை பதிவு

இலங்கையை கண்டித்து செப்.20-ல் சிபிஎம் ஆர்ப்பாட்டம்..!!