ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தான் – காங்கிரஸ் நிலைப்பாடு ஒன்றுதான்: ஒன்றிய அமைச்சர் அமித்ஷா சாடல்

புதுடெல்லி: ஜம்மு காஷ்மீர் சட்டமன்ற தேர்தலில் பாகிஸ்தான் நிலைப்பாட்டிற்கு ஏற்றார்போல காங்கிரஸ் மற்றும் தேசிய மாநாட்டு கூட்டணி செயல்படுவதாக பாஜ குற்றம்சாட்டியுள்ளது. பாகிஸ்தானின் பாதுகாப்பு துறை அமைச்சர் கவாஜா ஆசிப், அந்நாட்டு தொலைக்காட்சி ஒன்றில் நேர்காணலில் ஜம்மு காஷ்மீரின் 370வது சட்டப்பிரிவை மீட்டெடுக்கும் விவகாரத்தில் பாகிஸ்தான் மற்றும் காங்கிரஸ், தேசிய மாநாட்டு கட்சியும் ஒரே நிலைப்பாட்டோடு இருப்பதாக கூறியுள்ளார்.

பாஜ தலைவர்கள் பலர் காவாஜாவின் கருத்துக்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்து காங்கிரஸ் கட்சியை சாடியுள்ளனர். ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ‘‘பாகிஸ்தான் பாதுகாப்பு துறை அமைச்சரின் அறிக்கையானது எதிர்கட்சியை மீண்டும் ஒருமுறை அம்பலப்படுத்தியுள்ளது. எதிர்கட்சி தலைவர் ராகுல் காந்தியின் கட்சியின் செயல்பாடு மற்றும் பாகிஸ்தானும் எப்போதும் ஒன்றுதான்.

காங்கிரசுக்கும், பாகிஸ்தானுக்கும் ஒரே நோக்கமும், நிகழ்ச்சி நிரலும் இருப்பதை இந்த அறிக்கை மீண்டும் ஒரு முறை தெளிவுபடுத்தியுள்ளது. காங்கிரஸ் எப்போதும் தேசவிரோத சக்திகளுடன் கைகோர்த்து நிற்கிறது.ஆனால் மோடி அரசு இருப்பதை காங்கிரஸ் கட்சியும், பாகிஸ்தானும் மறந்துவிட்டன. ஜம்முவில் 370வது சட்டப்பிரிவு அல்லது தீவிரவாதம் மீண்டும் வரப்போவதில்லை” என்றார்.

Related posts

முடிவுக்கு வருகிறது போராட்டம் நாளை பணிக்கு திரும்பும் கொல்கத்தா டாக்டர்கள்

இந்தியாவிலிருந்து வெடிமருந்துகள் உக்ரைன் செல்கிறதா? ஒன்றிய அரசு மறுப்பு 

நந்தனம் ஓட்டலில் உள்ள ஸ்பாவில் பாலியல் தொழில் நடத்திய பெண் கைது: 4 பட்டதாரி இளம்பெண்கள் மீட்பு