புதுடெல்லி: லட்சத்தீவு மக்களவை தொகுதியில் போட்டியிட்டு வென்றவர் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் முகமது பைசல். கொலை முயற்சி வழக்கில் முகமது பைசலுக்கு லட்சத்தீவு கவரொட்டி நீதிமன்றம் 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. இதனால் எம்.பி. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இந்தநிலையில் முகமது பைசல் எம்.பி.க்கு கவரொட்டி நீதிமன்றம் விதித்த 10 ஆண்டுகள் சிறை தண்டனைக்கு கேரளா உயர்நீதிமன்றம் தடை விதித்தது. இதனால் பைசலுக்கு எம்பி பதவி மீண்டும் கிடைத்தது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.
இம்மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் முகமது பைசலுக்கு விதிக்கப்பட்ட 10 ஆண்டுகள் சிறை தண்டனையை நிறுத்தி வைத்த உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டது. கேரளா உயர்நீதிமன்றம் இந்த வழக்கில் 6 வாரங்களுக்குள் மறு ஆய்வு செய்து விசாரணை நடத்த வேண்டும். இந்த வழக்கில் கேரள உயர் நீதிமன்றத்தின் அணுகுமுறை தவறானது என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பி.வி. நாகரத்னா, உஜ்ஜல் புயான் அமர்வு உத்தரவிட்டது. இதனால் லட்சத்தீவு எம்பி பதவிக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது.