செங்கல்பட்டு: லஞ்சம் வாங்கிய வழக்கில் கிராம நிர்வாக அலுவலருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து செங்கல்பட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்கம் அருகே சாலவேடு அடுத்த ஒட்டகோயில் பகுதியைச் சேர்நதவர் சத்யசிவன்(40). இவர் தனக்கு சொந்தமான இடத்திற்கு பட்டா, சிட்டா, அடங்கல் ஆகியவற்றை பெற அப்பகுதி கிராம நிர்வாக அலுவலரான கண்ணப்பன்(51) என்பவரிடம் கடந்த 2008ம் ஆண்டு பேசினார். அப்போது, விஏஓ கண்ணப்பன் லஞ்சமாக ரூ5 ஆயிரம் கேட்டுள்ளார். இதுகுறித்து, சத்யசிவன் காஞ்சிபுரம் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார். அதன்படி போலீசார் ரசாயனம் தடவிய ரூ2600 பணத்தை விஏஓ கண்ணப்பணியிடம் லஞ்சமாக தருமாறு கூறி அனுப்பி வைத்தனர்.
போலீசாரின் ஆலோசனைப்படி கடந்த 2008ம் ஆண்டு அக்டோபர் மாதம் 11ம் தேதி லஞ்ச பணத்தை கொடுத்தபோது, லஞ்ச ஒழிப்பு துறை இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையிலான போலிசார் கையும் களவுமாக விஏஓ கண்ணப்பனை கைது செய்தனர். மேலும், செங்கல்பட்டு முதன்மை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்நிலையில், இவ்வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி ஜெயஸ்ரீ, லஞ்சம் வாங்கிய விஏஓ கண்ணப்பனுக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ20 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.