திருவனந்தபுரம்: கேரள மாநிலம் மலப்புரம் அருகே உள்ள பெரிந்தல்மண்ணாவைச் சேர்ந்த 49 வயதான ஒருவருக்கு 15 வயதில் ஒரு மகள் உண்டு. இந்த சிறுமி அருகிலுள்ள ஒரு பள்ளியில் 9ஆம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த வருடம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சொந்த மகள் என்றும் பார்க்காமல் தந்தை மிரட்டி பலாத்காரம் செய்தார். இந்நிலையில் பள்ளியில் வைத்து குழந்தைகள் நல அமைப்பினர் நடத்திய கவுன்சிலிங்கில் அந்த சிறுமி தந்தை தன்னை பலாத்காரம் செய்தது குறித்து கூறியுள்ளார்.
இதுகுறித்து குழந்தைகள் நல அமைப்பினர் பெரிந்தல்மண்ணா போலீசில் புகார் செய்தனர். போலீசார் போக்சோ உள்பட பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து தந்தையை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு பெரிந்தல்மண்ணா போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், தந்தைக்கு 150 வருடம் கடுங்காவல் சிறையும், ரூ.4 லட்சம் அபராதமும் விதித்து உத்தரவிட்டது. அபராதத் தொகையில் ரூ.2 லட்சத்தை சிறுமிக்கு கொடுக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.