தேர்தல் வாக்குறுதிகளை உடனே நிறைவேற்ற முடியவில்லை ஜெகன் மோகன் ரெட்டி ஆட்சியால் ஆந்திராவில் கஜானா காலி: முதல்வர் சந்திரபாபு நாயுடு வேதனை

திருமலை: முந்தைய ஆட்சியாளர்களால் ஆந்திராவில் கஜானா காலியாக உள்ளது. இதனால் தேர்தல் வாக்குறுதிகளை உடனடியாக நிறைவேற்ற முடியாத நிலை உள்ளது என முதல்வர் சந்திரபாபுநாயுடு வேதனை தெரிவித்தார்.
ஆந்திராவில் முதல்வர் சந்திரபாபுநாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சி ஆட்சி பொறுப்பேற்று சுமார் 2 மாதங்கள் ஆகிறது. ஆனால் மக்கள் நலத்திட்டங்கள் மற்றும் தேர்தல் வாக்குறுதிகளை இன்னும் புதிய அரசு நிறைவேற்றவில்லை என முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் தொடர்ந்து குறை கூறி வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் மடகசீராவில் நடந்த என்டிஆர் ஓய்வூதியம் வழங்கும் நிகழ்ச்சியில் முதல்வர் சந்திரபாபு நாயுடு கலந்து கொண்டு வீடுவீடாக சென்று முதியோருக்கு ஓய்வூதியங்களை வழங்கினார்.

பின்னர் நடந்த கூட்டத்தில் முதல்வர் பேசியதாவது: எனது தலைமையிலான ஆட்சி பொறுப்பேற்றதும் தேர்தல் வாக்குறுதிகளை வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட விரும்பினேன். ஆனால் ஆட்சிக்கு வந்த பிறகுதான் முந்தைய ஜெகன்மோகன் ரெட்டி அரசு கஜானாவை காலி செய்த விவரம் தெரிந்தது. குறிப்பாக முந்தைய ஆட்சியாளர்களின் மோசமான நிர்வாகம், ஊழல், மோசடி ஆகியவற்றால் ஆந்திராவில் கஜானா காலியாக உள்ளது. இருப்பினும் வாக்குறுதிப்படி முதியோர் பென்ஷனை ₹4 ஆயிரமாக உயர்த்தி வழங்கினேன். ஆனால் மற்ற வாக்குறுதிகளை உடனே நிறைவேற்ற முடியாது. ஓராண்டுக்கு பிறகு படிப்படியாக மற்ற திட்டங்கள் நிறைவேற்று வேன். முந்தைய ஆட்சியாளர்கள் ஆந்திராவை திவாலாக்கிவிட்டு சென்றுள்ளனர். ஆனால் எனது அணுகுமுறை அப்படியிருக்காது. கடன் வாங்காமல் வருமானத்தை உயர்த்தி அதன்மூலம் நலத்திட்ட உதவிகளை செயல்படுத்துவேன். எனவே மக்கள் ஒத்துழைப்பு அளிக்கவேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

 

Related posts

குரங்கம்மை நோய் தடுப்பு குறித்து மாநில அரசுகளுக்கு ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சகம் கடிதம்

மேற்கு வங்கத்தில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள் உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும்: உச்சநீதிமன்றம் உத்தரவு

தமிழ்நாட்டில் குரங்கம்மை பாதிப்பு இருக்கிறதா? – அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்