‘‘இலை கட்சி மாஜிக்களிடையே நடக்கும் பனிப்போர் இன்னும் முடிந்தபாடில்லையாமே…’’ என்றபடி வந்தார் பீட்டர் மாமா. ‘‘கடலோர மாவட்டத்தில் இலை கட்சியின் மாஜி அமைச்சர் ஒருத்தர், இரவு-பகல் என்று பார்க்காமல் மாவட்டத்தில் உள்ள கட்சி நிர்வாகிகளை சந்தித்து வருகிறாராம்… இவர் முதலில் தேனிக்காரர் அணியில இருந்தார். அப்புறமா சேலத்துக்காரர் அணிக்கு தாவிட்டாரு. இப்போது எல்லாம் இலைக்கட்சி நிர்வாகிகளை சந்திக்கும் போது தேனிக்காரர் அணியில் இருந்து நான் விலகி சேலத்துக்காரர் அணிக்கு வந்து விட்டேன். கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் யாரும் என்னை பார்த்து அச்சம் அடைய வேண்டாம்.. என்னிடம் எப்போது வேண்டுமானாலும் வந்து பேசலாம். இதற்கு முன்பு தான் என்னிடம் பேசினால் கட்சி நடவடிக்கை எடுக்கும்னு பயந்து ஒதுங்கி சென்றீர்கள். இனி அப்படி செல்ல வேண்டாம்னு கூறி வருகிறாராம்… இந்த தகவல் தெரிய வந்ததும், மாஜி அமைச்சர் மணியானவர் என்ன செய்வது என்று தெரியாமல் அவரது ஆதரவாளர்களிடம் புலம்பி வருகிறாராம்… சொந்த கட்சிக்குள்ளே நிர்வாகிகளை இழுப்பதில் மாஜி அமைச்சர்களுக்குள் போட்டாப்போட்டி எழுந்திருக்கு…’’ என்றார் விக்கியானந்தா.
‘‘ஜெயில் காக்கிகள் பணியிட மாற்றமே வேண்டாம்னு சொல்லி ஓட்டம் பிடிக்குறாங்களாமே என்ன கதையாம்..’’ எனக்கேட்டார் பீட்டர் மாமா.
‘‘வெயிலூர் சென்ட்ரல் ஜெயில்ல பணியாற்றும் காக்கிகள் 70 சதவீதம் பேர் வெளி மாவட்டங்களை சேர்ந்தவர்களாக இருக்காங்க.. இவங்க வெயிலூர் ஜெயில்ல ரொம்ப வருஷமாக வேலை செஞ்சிக்கிட்டு வர்றாங்களாம்.. இதனால, வெயிலூரையே சொந்த ஊராக மாற்றி இங்கேயே செட்டில் ஆகிட்டாங்களாம்.. 3 வருஷத்துக்கு மேல பணியாற்றி வர்ற காக்கிகளை பணியிடமாற்றம் செய்ய முடிவு செஞ்சி, காக்கிகளோட பட்டியல் தயார் செஞ்சிட்டு வர்றாங்களாம்.. இதையறிந்த சிறை காக்கிகள் பலரும், பணியிட மாற்றம் வேண்டாம்னு கூறி வர்றாங்களாம்.. இதற்காக காக்கிகள் தரப்புல இருந்து, பிள்ளைகள் கல்வி பாதிக்கும், மருத்துவம்னு பல காரணங்களை சாக்குபோக்கு சொல்லி வர்றாங்களாம்.. உண்மையான காரணம், வெயிலூர் ஜெயில்ல ‘ப ‘ வைட்டமின் அதிகமாக கிடைக்குதாம்.. இதை வாங்கி செட்டில் ஆகிட்டதால, வேற இடத்துக்கு பணியிட மாற்றமாகி போறதுக்கு சிறை காக்கிகள் தயாராக இல்லைன்னு காக்கிகள் வட்டாரத்துல இருந்தே பேசிக்கிறாங்க..’’ என்றார் விக்கியானந்தா. ‘‘கடைசி மகனுக்கும் முடிசூட்டி அழகு பார்க்க ஆசைப்படுகிறாராமே தேனிக்காரர் தெரியுமா…’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘இலை கட்சியில் இணைந்தே தீருவேன் என சபதம் போட்டு, சுத்தி சுத்தி வரும் தேனிக்காரரை உள்ளே விடமாட்டேன்னு உறுதியாக இருக்கிறாராம் இலைக்கட்சி தலைவர்.. ஆனால், கரைவேட்டி கட்டமுடியாமல் போன நிலையில் கூட, எனக்கு எந்த பதவியும் வேண்டாம், நான் பார்க்காத பதவியே இல்லைன்னு சொல்லிக்கொண்டிருக்கும் தேனிக்காரர், மம்மி இறந்த நேரத்தில் முதல்வர் பதவி வேண்டாம் என கூறியபோதும், சின்ன மம்மிதான் என்னை முதல்வராக்கினார். முதல்வர் பதவி மீது ஆசை வந்தவுடன், என்னை கட்டாயப்படுத்தி ராஜினாமா செய்ய வைத்த நேரத்தில், தனது கன்னத்தில் ஒருவர் அடித்துவிட்டார் என சமீபத்தில் கூட்டிய தனது மா.செ. கூட்டத்தில் உருக்கமாக பேசியிருக்காரு.. இதில், வேறுகட்சி ெதாடங்க வேண்டாம்னு கூறி, இலைக்கட்சியுடன் இணைவதில் உறுதியாக இருக்கும் அவரது ஆதரவு நிர்வாகிகளை மட்டும் பேச வச்சாராம்.. அதே நேரத்தில் மாவட்ட நிர்வாகிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் வகையில், ரெண்டு தொகுதிக்கு ஒரு மா.செயலாளர்களை போடவேண்டும் எனவும் சொல்லியிருக்காரு..
அதோடு மட்டுமல்லாமல், தனது வாரிசை களம் இறக்கவும் தேனிக்காரர் திட்டம் ஒன்றை வச்சிருக்காராம்.. எம்பியாக இருந்த மூத்த மகனை விட, தன்னைப்போல ஆன்மிக நாட்டம் அதிகமுள்ள ரெண்டாம் மகனை உள்ளே கொண்டு வரப்போறாராம்.. தந்தையின் உயர்வுக்கு பக்கபலமாக இருந்து, கூட்டத்தை கூட்டுவது, நிர்வாகிகளுக்கு பசையை தட்டி விடுவது, அவ்வப்போது சமூகவலைதளங்களில் கருத்துகளை பதிவிடுவதுன்னு அனைத்து வேலைகளையும் அவர் செய்துகிட்டு வர்றாராம்.. மா.செ. கூட்டத்தில் கூட அவருக்கு ஒரு முக்கிய பதவியை கொடுக்கணுமுன்னு பேச்சும் எழுந்துச்சாம்.. கட்சி ஒன்றாகும் பட்சத்தில், தனது ரெண்டாவது மகனுக்கு ஒரு முக்கிய பதவி வாங்கி கொடுக்கணும், எம்எல்ஏவாக ஆக்கி அழகு பாக்கணும் என்பதில் தேனிக்காரர் உறுதியா இருக்காராம்..’’ என்றார் விக்கியானந்தா. ‘‘ஆய்வு கூட்டங்களில் கறார், திடீர் ஆய்வுன்னு கடைகோடி மாவட்ட புதிய பெண் ஆட்சியர் அதிரடி தொடருதாமே…’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘கடைகோடி மாவட்டத்தில் புதிதாக பொறுப்பேற்ற பெண் ஆட்சியர் அதிரடி காட்டி வர்றாராம்.. விடுமுறை நாளிலும் ஓய்வின்றி அவரது பணி தொடர்கிறதாம்.. எல்லை பகுதிகளில் திடீரென்று ஆய்வுக்கு சென்ற அவர் அங்குள்ள சோதனை சாவடிகள் எப்படி செயல்படுகிறதுன்னு நேரில் பார்வையிட்டு இருக்கிறாரு.. அரசு நிகழ்ச்சிக்கு செல்லும்போது தன்னுடன் வழக்கமாக வருகிற அலுவலர்களை தவிர்த்துவிட்டு, ஏதேனும் ஒரு பகுதிக்கு ‘சர்ப்ரைஸ்’ ஆய்வில் ஈடுபடுகிறாராம்.. இதனால் எங்கே எந்த துறையை ஆய்வு செய்ய போறாருங்கிற விவரம் முன்கூட்டியே கசியாமல் பார்த்துக்கொள்கிறாராம்.. அதேபோன்று, ஆய்வு கூட்டங்களிலும் கறார் காட்டி வருகிறாராம்.. அரசு அலுவலர்கள் பணிக்கு தாமதமாக வரக்கூடாது, தன்னை பார்க்க வருகிறவங்க பரிசு பொருட்கள் எதையும் கொண்டுவந்து பார்க்க வரவேண்டாம் என பல அறிவுரைகளையும் வழங்கி ஏற்கனவே பரபரப்பை ஏற்படுத்தியிருந்தாரு.. அவரது நடவடிக்கைகள் மக்களிடமும், அலுவலர்களிடமும் வரவேற்பை பெற்றுள்ள நிலையில் மாவட்டத்தை மேலும் வளர்ச்சிப்பாதைக்கு அழைத்து செல்லும் என்ற நம்பிக்கை மக்களிடம் ஏற்பட்டுள்ளதாம்..’’ என முடித்தார் விக்கியானந்தா.