சென்னை: தீபாவளி பண்டிகையையொட்டி சென்னை தீவுத்திடலில் நியாயமான முறையில் டெண்டர் நடத்த உத்தரவிடக் கோரி சென்னை பட்டாசு விற்பனையாளர்கள் நலச்சங்கத்தின் சார்பில் வழக்கு தொடங்கப்பட்டது. அந்த மனுவில், தீவுத்திடலில் பட்டாசு கடைகள் அமைப்பதற்காக டெண்டர் அறிவிப்பாணையை மாற்றியமைக்கவும், டெண்டர் விண்ணப்பத்தை எந்த காரணமும் தெரிவிக்காமல் ஏற்பதற்கும், நிராகரிப்பதற்கும் அதிகாரம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இதுபோன்ற சில நிபந்தனைகளை நீக்கி வரும் அக்டோபர் 18ம் தேதி முதல் நவம்பர் 1ம் தேதி வரை தீவுத்திடல் பட்டாசு கடை அமைப்பதற்கான திருத்தப்பட்ட டெண்டரை வெளியிட வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது.
இந்த வழக்கு நீதிபதி எம்.தண்டபாணி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் விஜய் ஆனந்த், சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் டெண்டர் நிபந்தனைகள் தமிழ்நாடு டெண்டர் வெளிப்படை தன்மை விதிகளுக்கு எதிராக உள்ளது என்றார். அப்போது, நிபந்தனைகளை திரும்ப பெற்றுள்ளதாக சுற்றுலா வளர்ச்சி கழகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதை பதிவு செய்த நீதிபதி தீவுத்திடலில் பட்டாசு கடை அமைப்பதற்கான திருத்தி அமைக்கப்பட்ட டெண்டரை வெளியிடுமாறு சுற்றுலா வளர்ச்சி கழகத்திற்கு உத்தரவிட்டார்.