டெல்லி: ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யும் ஐஆர்சிடிசி இணையதளம் மற்றும் செயலி மீண்டும் செயல்பட தொடங்கியது. இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனமான இந்தியன் ரயில்வே மூலம் நாள்தோறும் பல லட்சம் பேர் ரயில்களில் பயணம் செய்து வருகின்றனர். ரயில்களில் டிக்கெட் முன்பதிவு செய்ய ஐஆர்சிடிசி இணையதளம், ரயில்வே ஆப்ஸ்கள் இயங்கி வருகிறது. இதில் உணவு, சுற்றுலா உள்ளிட்ட பல்வேறு வசதிகளும் கிடைக்கின்றன. மேற்கண்ட இணையதளம் அவ்வப்போது புதிதாக அப்டேட் செய்யப்பட்டு வருகிறது.
இந்தநிலையில் ஐஆர்சிடிசி இணையதளம் மற்றும் ஆப்ஸ் திடீரென முடங்கியதால் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ய முடியாமல் பயணிகள் அவதி அடைந்துள்ளனர். இதுகுறித்து இந்திய ரயில்வே நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில், ‘தொழில்நுட்ப காரணங்களால் ஐஆர்சிடிசி-யின் இணைய தளம் மற்றும் ஆப்ஸ் மூலம் முன்பதிவு செய்யப்படும் டிக்கெட் முன்பதிவு சேவை பாதிக்கப்பட்டுள்ளது. சிஆர்ஐஎஸ்-யின் தொழில்நுட்பக் குழுவினர் மேற்கண்ட சிக்கலைத் தீர்க்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர். ரயில்வேயின் இணைய தளங்களுக்கு மாற்றாக அமேசான், மேக்மைட்ரிப் போன்ற பிற பி2சி பிளேயர்கள் மூலம் பயணிகள் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொள்ளலாம்’ என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், தொழில்நுட்ப வல்லுநர்கள் பிரச்னையை சரி செய்துவிட்டதாகவும் முன்பதிவு வசதி மீண்டும் தொடங்கியிருப்பதாகவும் ஐஆர்சிடிசி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இணையதளம் மட்டுமல்லாமல் கைப்பேசி செயலியும் வழக்கம் போல இயங்குவதாகவும், இணையதளம் செயல்படாததால் மக்களுக்கு ஏற்பட்ட சிக்கலுக்கு வருந்துவதாகவும் தெரிவித்துள்ளது.