டாஸ்மாக் கடை வெளியே விலைப்பட்டியல் உள்ளதா? வக்கீல் கமிஷனர் குழு ஆய்வு செய்ய ஐகோர்ட் கிளை உத்தரவு

மதுரை: டாஸ்மாக் கடை வெளியே மதுபானங்களின் விலை பட்டியல் உள்ளதா என்று வக்கீல் கமிஷனர் குழு ஆய்வு செய்ய ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டது. தமிழகத்தில் மது விற்பனை நேரத்தை பிற்பகல் 2 மணி முதல் இரவு 8 மணி வரை எனக் குறைக்க உத்தரவிட வேண்டும். 21 வயதுக்குட்பட்டவர்களுக்கு மது விற்பனை செய்வதைத் தடை செய்யும் வகையில், மது வாங்குவோருக்கு உரிய அடையாள அட்டை வழங்கவும் உத்தரவிட வேண்டும் என கடந்த ஆண்டு மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்த வழக்கை ஏற்கனவே விசாரித்த நீதிபதிகள் ஆர்.மகாதேவன், ஜெ.சத்யநாராயண பிரசாத் அமர்வு பிறப்பித்த உத்தரவு: 21 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு மது விற்பனை செய்யக்கூடாது என சட்டம் கூறுகிறது. ஆனால், தற்போது இளைய சமுதாயத்தினர் மதுவுக்கு அடிமையாகி வருகின்றனர். பொது நலன் கருதி, மதுப்பழக்கத்துக்கு அடிமையானவர்களைத் தடுக்க, மதுபான விற்பனை நேரத்தை தமிழக அரசு கட்டுப்படுத்தலாம். மது குறித்து பொதுமக்கள், மது அருந்துவோரிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். தமிழகத்தில் மது அருந்தி வாகனம் ஓட்டுவோர் மீதான வழக்குப்பதிவு அதிகரித்து வருகிறது. இதுதொடர்பாக அரசு அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

மதுவை தடுக்க கடுமையான சட்டம் கொண்டு வர வேண்டும். அரசின் நிர்வாக முடிவில் நீதிமன்றம் தலையிட முடியாது என்பது தெரியும். ஆனால், பொதுநலன் கருதி சில வழிகாட்டுதல், அறிவுரைகளை வழங்குகிறோம். மது வாங்குபவர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் நடைமுறையை அரசு அமல்படுத்த வேண்டும். இந்த அட்டை வைத்துள்ளவர்களுக்கு மட்டுமே மதுபானங்களை டாஸ்மாக் கடைகளில் விற்பனை செய்ய வேண்டும். மதுப்பாட்டில்களில் அடையாள வில்லை (லேபிள்), விலை விவரம், புகார் தெரிவிக்கும் எண் முதலானவற்றை தமிழில் அச்சிட்டு ஒட்ட வேண்டும். மேலும், தமிழகத்தில் மதுபானம் விற்பனை செய்யும் நேரத்தை பிற்பகல் 2 முதல் இரவு 8 மணி வரை எனக் குறைத்து அரசு அறி விக்கவேண்டும். இவ்வாறு உத்தரவு பிறப்பித்திருந்தனர்.

இந்த உத்தரவை இதுவரை நடைமுறைப்படுத்தாத ஒன்றிய மற்றும் மாநில அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க உத்தரவிட கோரி, ரமேஷ் என்பவர் வழக்கு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், டி.பரதசக்கரவர்த்தி அமர்வு முன் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், ‘‘டாஸ்மாக் கடை வெளியே மதுபானங்களின் விலை பட்டியல் உள்ளதா என்பது குறித்து ஆய்வு செய்ய, துணை சொலிசிட்டர் ஜெனரல் கோவிந்தராஜன், வழக்கறிஞர் காரல் மார்க்ஸ் ஆகியோர் வக்கீல் கமிஷனராக நியமிக்கப்படுகிறார்கள். இவர்கள் இன்று ஆய்வு செய்ய வேண்டும். அவ்வாறு விலை பட்டியல் இல்லாத டாஸ்மாக் கடைகளின் ஊழியர்களை சம்பந்தப்பட்ட காவல்துறை புகார் கொடுத்து அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுகுறித்து நாளை (ஆக. 23) உயர்நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யவேண்டும்’’ என உத்தரவிட்டு வழக்கு விசாரணையை தள்ளி வைத்தனர்.

Related posts

போலி இ-மெயில் அனுப்பி பணம் பறிக்கும் மோசடி கும்பல்; எச்சரிக்கையாக இருக்க சைபர் போலீஸ் அறிவுறுத்தல்

அரசு உதவிபெறும் பள்ளி இசை ஆசிரியர் பெற்ற கூடுதல் ஊதியத்தை திரும்ப வசூலிக்கும் உத்தரவு செல்லும்: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

பரந்தாமன் எம்எல்ஏ உருவாக்கியுள்ள “நம்ம எக்மோர்” செயலி: துணை முதல்வர் தொடங்கி வைத்தார்