ரூ.200 கோடி முதலீட்டில் சென்னையில் உலகளாவிய திறன் மையம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் சிகாகோவில் ஒப்பந்தம் கையெழுத்து

சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் நேற்று அமெரிக்க நாட்டின் சிகாகோ நகரில், 200 கோடி ரூபாய் முதலீட்டில் 500 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், சென்னையில் ஈட்டன் நிறுவனத்தின் உற்பத்தி வசதியை விரிவாக்குவதுடன், ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, உலகளாவிய பயன்பாட்டு பொறியியல் மையத்தை நிறுவுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தமும், அஷ்யூரன்ட் நிறுவனத்தின் இந்தியாவின் முதல் உலகளாவிய திறன் மையத்தை சென்னையில் நிறுவுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தமும் மேற்கொள்ளப்பட்டது.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான அரசு ஆட்சிப் பொறுப்பேற்ற கடந்த 3 ஆண்டுகளில், அதிக முதலீடுகளை ஈர்க்கும் உயர் தொழில்நுட்பம் வாய்ந்த தொழில்களையும், அதிக எண்ணிக்கையிலான வேலைவாய்ப்புகளை உருவாக்கும் தொழில்களையும் ஈர்த்துள்ளதோடு, 2030-ஆம் ஆண்டிற்குள் 1 டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரமாக தமிழ்நாட்டை உயர்த்த வேண்டும் என்ற இலக்கை அடைவதற்காக பல்வேறு நடவடிக்கைகளை முனைப்போடு எடுத்து வருகிறது.

தமிழ்நாட்டில் நிலவும் அமைதியான சூழல் காரணமாக ஏராளமான தொழிற்சாலைகள் கடந்த மூன்றாண்டுகளாக உருவாகி வருகிறது. தொழில் வளர்கிறது என்றால் மாநிலம் வளர்கிறது, அதன்மூலம் கிடைக்கும் வேலைவாய்ப்புகள் மூலமாக மாநிலத்தின் சமூக, பொருளாதார நிலை உயர்ந்து வருகிறது. அந்த வகையில், வளர்ச்சியின் அடையாளமாக திகழும் தொழில் நிறுவனங்களை தமிழ்நாட்டில் அதிக அளவில் தொடங்கிட முதலீடுகளை ஈர்த்திடும் வகையிலும், இளைஞர்களுக்கு அதிக எண்ணிக்கையிலான வேலைவாய்ப்புகளை உருவாக்கிடவும் முதல்வர் மு.க. ஸ்டாலின் அமெரிக்க நாட்டிற்கு அரசு முறைப் பயணம் மேற்கொண்டுள்ளார்.

இப்பயணத்தின் போது, முதலமைச்சர் முன்னிலையில் சான்பிரான்சிஸ்கோவில் 29.8.2024 அன்று நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில், உலகின் முன்னணி தொழில் நிறுவனங்களான நோக்கியா, பேபால், ஈல்ட்டு இன்ஜினியரிங் சிஸ்டம்ஸ், மைக்ரோசிப் டெக்னாலஜி, இன்பிங்ஸ் ஹெல்த்கேர் மற்றும் அப்ளைடு மெட்டீரியல்ஸ் ஆகிய 6 நிறுவனங்களுடன் 900 கோடி ரூபாய் முதலீட்டில் 4,100 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்களும், 30.8.2024 அன்று ஆப்பிள், கூகுள் மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனங்களின் உயர் அலுவலர்களை சந்தித்து, தமிழ்நாட்டில் தொழில் முதலீடுகளை மேற்கொள்ள அழைப்பு விடுத்ததோடு, கூகுள் நிறுவனத்துடன் தமிழ்நாட்டில் செயற்கை நுண்ணறிவு ஆய்வகங்கள் அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தமும், 31.8.2024 அன்று ஓமியம் நிறுவனத்துடன் எலக்ட்ரோலைசலர்கள் உற்பத்தி மற்றும் பசுமை ஹைட்ரஜன் உற்பத்தித் துறையில் 500 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் 400 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செங்கல்பட்டு மாவட்டத்தில் புதிய தொழிற்சாலையை அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தமும் மேற்கொள்ளப்பட்டன.

அதனைத் தொடர்ந்து, நேற்று அமெரிக்க நாட்டின் சிகாகோ நகரில் ஈட்டன் மற்றும் அஷ்யூரன்ட் நிறுவனங்களுடன் முதலமைச்சர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. அதன் விவரங்கள்:
* ஈட்டன் நிறுவனம்: ஈட்டன் கார்ப்பரேஷன் (Eaton Corporation) நிறுவனம் என்பது தரவு மையம், பயன்பாடு, தொழில்துறை, வணிகம், இயந்திர கட்டிடம், குடியிருப்பு, விண்வெளி மற்றும் இயக்க சந்தைகளுக்கான உற்பத்தி மற்றும் பகிர்மான பணிகளை மேற்கொள்ளும் மேலாண்மை நிறுவனமாகும். குடியிருப்பு, வணிக கட்டிடம், மின்சார வாகனங்கள், தரவு மையம் மற்றும் eVTOL வாகனங்களுக்கான ஆற்றல் உற்பத்தி, பரிமாற்றம், விநியோகம் மற்றும் நுகர்வுக்கு அவற்றின் தயாரிப்புகள் பயன்படுத்தப்படுகின்றன.

இந்நிறுவனத்தின் தலைமையகங்கள் அயர்லாந்து நாட்டின் டப்ளின் மற்றும் அமெரிக்க நாட்டின் ஓஹியோவின் பீச்வுட் ஆகிய இடங்களில் அமைந்துள்ளன. உலகளவில் 35 நாடுகளில் சுமார் 208 இடங்களில் உற்பத்தி வசதிகள் கொண்ட பார்ச்சூன் 500 நிறுவனங்களில் ஒன்றாகும். இத்தகைய ஈட்டன் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. தமிழ்நாடு முதலமைச்சர் முன்னிலையில், ஈட்டன் நிறுவனத்திற்கும் தமிழ்நாடு அரசிற்கும் இடையே, 200 கோடி ரூபாய் முதலீட்டில், 500 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் சென்னையில் தற்போதுள்ள ஈட்டன் நிறுவனத்தின் உற்பத்தி வசதியை விரிவாக்குவதுடன், ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, உலகளாவிய பயன்பாட்டு பொறியியல் மையத்தை நிறுவுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இந்த புரிந்துணர்வு ஒப்பந்த நிகழ்வில், ஈட்டன் நிறுவனத்தின் குளோபல் எனர்ஜி தலைவர் மேத்யூ ஹாக்மேன் மற்றும் உயர் அலுவலர்கள் பங்கேற்றனர்.

* அஷ்யூரன்ட் நிறுவனம்: அஷ்யூரன்ட் நிறுவனம் பார்ச்சூன் 500 இன்சூரன்ஸ் நிறுவனங்களில் ஒன்றாகும். இந்நிறுவனம் அட்லாண்டாவை தலைமையிடமாக கொண்டு இடர் மேலாண்மை தயாரிப்புகள் மற்றும் சேவைகளை வழங்கி வருகிறது. சொத்து, விபத்து, நீட்டிக்கப்பட்ட சாதனங்களின் பாதுகாப்பு போன்ற பலவிதமான சிறப்பு மற்றும் முக்கிய சந்தை காப்பீட்டுத் திட்டங்களை வழங்கி வருகின்றன. இந்நிறுவனத்தின் உலகளாவிய தலைமையகம் அமெரிக்க நாட்டின் அட்லாண்டாவில் அமைந்துள்ளது. இத்தகைய அஷ்யூரன்ட் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

தமிழ்நாடு முதலமைச்சர் முன்னிலையில், அஷ்யூரண்ட் நிறுவனத்திற்கும் தமிழ்நாடு அரசிற்கும் இடையே, அஷ்யூரண்ட் நிறுவனத்தின் இந்தியாவின் முதல் உலகளாவிய திறன் மையத்தை சென்னையில் நிறுவுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இந்த புரிந்துணர்வு ஒப்பந்த நிகழ்வில், அஷ்யூரண்ட் நிறுவனத்தின் செயல் துணைத் தலைவர் பிஜு நாயர் மற்றும் உயர் அலுவலர்கள் பங்கேற்றனர். இந்நிகழ்வின் போது, தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, வர்த்தகத்துறை செயலாளர் அருண் ராய், தொழில் வழிகாட்டி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் விஷ்ணு மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.

* ‘சிகாகோவில் மற்றுமொரு பயனுள்ள நாள்’
சிகாகோவில் ஈட்டன் மற்றும் அஷ்யூரன்ட் நிறுவனங்களுடன் மேற்கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதளப்பதிவில், சிகாகோவில் மற்றுமொரு பயனுள்ள நாள்! சென்னையில் 200 கோடி ரூபாய் முதலீட்டில் 500 பேருக்கு வேலைவாய்ப்பளிக்கும் வகையில், ஈட்டன் நிறுவனத்தின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு மற்றும் பொறியியல் மைய விரிவாக்கத்துக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மேற்கொண்டேன். மேலும், இந்தியாவில் அஷ்யூரன்ட் நிறுவனத்தின் முதல் உலகளாவிய திறன் மையம், விரைவில் சென்னையில் அமையவுள்ளதையும் உறுதிசெய்தேன் என்று கூறியுள்ளார்.

Related posts

செந்தில் பாலாஜிக்கு எதிரான மோசடி வழக்கு: குற்றச்சாட்டுகள் பதிவுக்காக விசாரணை அக்.1ம் தேதிக்கு தள்ளிவைப்பு

பாலியல் புகாருக்குள்ளான டாக்டர் சுப்பையா மீதான வழக்கில் தனி நீதிபதி உத்தரவிற்கு தடை விதிக்க ஐகோர்ட் மறுப்பு

28ம் தேதி காஞ்சிபுரம் பச்சையப்பன் கல்லூரி திடலில் திமுக கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்கும் பவள விழா பொதுக்கூட்டம்: மூத்த நிர்வாகிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் திடீர் ஆலோசனை