புதுடெல்லி: அமலாக்க துறை உதவி இயக்குநர் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்ததை தொடர்ந்து, அமலாக்க இயக்குனரகத்தை உச்ச நீதிமன்றம் மூட வேண்டும் என்று ஆம் ஆத்மி கட்சி வலியுறுத்தி உள்ளது. டெல்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் நடவடிக்கை எடுக்காமல் இருப்பதற்காக மதுபான விற்பனை நிறுவன தொழிலதிபர் அமன்தீப் தாலிடம் அமலாக்க இயக்குநரகத்தின் துணை இயக்குநர் பவன் காத்ரி ரூ.5 கோடி லஞ்சம் கேட்டு பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், செய்தியாளர்களை சந்தித்து பேசிய ஆம் ஆத்மி கட்சியின் மாநிலங்களவை எம்பி. சஞ்சய் சிங், “ரூ.5 கோடி லஞ்சம் பெற்றுள்ள விவகாரத்தில் அமலாக்க இயக்குநரக உதவி இயக்குநருக்கு எதிராக சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது. மதுபான ஊழல் தொடர்பான ஆதாரத்தை கண்டுபிடிக்க அமலாக்கத்துறை தவறிவிட்டது. தற்போது அமலாக்கதுறை என்பது மிரட்டி பணம் பறிக்கும் துறையாகி விட்டது. முறைகேடு விசாரணை என்ற பெயரில் பணம் பறிக்கிறார்கள். நாட்டின் பல்வேறு பகுதிகளில் எம்எல்ஏக்களை உடைக்க இது பயன்படுத்தபடுகிறது. இது குண்டர்களின் துறை. எனவே, இந்த துறையை உடனடியாக மூட உச்சநீதிமன்றம் நடவடிக்கை எடுக்க வேண்டும். லஞ்சமாக பெற்றத் தொகையில் யாருக்கு எவ்வளவு பங்கு கிடைத்தது என்பது பற்றி விசாரணை நடத்த வேண்டும்,” என்று கூறினார்.