மதுராந்தகம்: விசிகவின் செங்கல்பட்டு மேற்கு மாவட்ட செயலாளராக பொன்னிவளவன் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். நேற்று முன்தினம் நடந்த, புதிய மாவட்ட செயலாளரை அறிமுகம் செய்து வைக்கும் கூட்டத்தில் பனையூர் பாபு பங்கேற்றார். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் செங்கல்பட்டு மேற்கு மாவட்ட செயலாளராக பொறுப்பேற்றுள்ள பொன்னிவளவன் அறிமுக கூட்டம் மற்றும் நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டம் மதுராந்தகம் அடுத்த படாளத்தில் நேற்று முன்தினம் காலை நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு, மாவட்ட செயலாளர் பொன்னிவளவன் தலைமை தாங்கினார்.
தேர்தல் பணிக்குழு உறுப்பினர் விடுதலைச்செழியன், மண்டல செயலாளர் கிட்டு, துணை செயலாளர் விடுதலை செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றிய செயலாளர் முகிலன், அனைவரையும் வரவேற்றார். இதில், கட்சி ஊடக முதன்மை செயலாளர் பனையூர் பாபு எம்எல்ஏ, துணை பொதுச் செயலாளர் எழில்கரோலின் ஆகியோர் கலந்து கொண்டு மாவட்ட செயலாளர் பொன்னிவளவனை அறிமுகப்படுத்தி வைத்து பேசினர். இதனைத்தொடர்ந்து மாவட்ட செயலாளர் பொன்னிவளவனுக்கு ஒன்றிய, நகர, பேரூர், நிர்வாகிகள் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.
இதனைத்தொடர்ந்து செங்கல்பட்டு மேற்கு மாவட்டம் முழுவதும் உள்ள கிராமங்களில் ஆகஸ்ட் 17ம் தேதி கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் பிறந்தநாள் விழா சிறப்பாக கொண்டாடுவது, விசிக கட்சி கொடி ஏற்றுவது, நலத்திட்ட உதவிகள் வழங்குவது, கட்சியில் உறுப்பினர் சேர்ப்பது உள்ளிட்ட கட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில், நிர்வாகிகள் ஜெபா, எடிசன், ஜீவா, சாம்ராஜ், நாராயணன், ராஜி, ஆதிதமிழன், வீரா, தமிழரசன் உள்ளிட்ட மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.