தஞ்சாவூர்: குற்றங்களை உடனுக்குடன் தடுக்கவும், குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் தஞ்சாவூர் மாவட்ட காவல்துறை சார்பில் உரக்கச் சொல் என்ற புதிய செல்போன் செயலியை தஞ்சை சரக டிஐஜி ஜியாவுல் ஹக், எஸ்பி ஆசிஷ் ராவத் ஆகியோர் நேற்று தொடங்கி வைத்தனர். குற்றச்சம்பவங்கள் நடக்கும் பொழுது அங்குள்ள பொதுமக்கள், வாலிபர்கள், பெண்கள் யாராக இருந்தாலும் இந்த செயலி மூலம் உடனடியாக தகவல் அளித்தால் உரிய நடவடிக்கை எடுக்கும் விதத்தில் இந்த செயலி அமைக்கப்பட்டுள்ளது. செல்போனில் கூகுள் ஆப் வாயிலாக உரக்கச் சொல் செயலியை பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.
இந்த ஆப்பை பயன்படுத்துபவர்கள் தாங்கள் வழியில் பார்க்கும் குற்றச்செயல்கள், போதைப்பொருள் உபயோகப்படுத்துதல், விற்பனை, கடத்தல், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் விதத்தில் நடந்து கொள்பவர்கள், ரவுடிகளின் அட்டகாசம், கள்ளச்சாராயம் விற்பனை, உற்பத்தி உட்பட பல்வேறு குற்ற செயல்கள் குறித்து இதில் பதிவிடலாம். மிகவும் எளிமையாக அனைவரும் பயன்படுத்தும் விதத்தில் இந்த செயலி உருவாக்கப்பட்டுள்ளது. இந்த செயலி வாயிலாக குற்ற செயல்கள் குறித்து பதிவு செய்பவர்களின் செல்போன் எண்ணோ அல்லது மற்ற தரவுகளோ எதுவும் பதிவு செய்யப்படாது. இதில் 24 மணி நேரமும் புகார் அளிக்கலாம். இந்த செயலியில் பதிவேற்றப்படும் புகார்கள் குறித்து சம்பந்தப்பட்ட பகுதிகளுக்கு அருகில் உள்ள காவல் நிலையங்களுக்கு தகவல் சென்று உடன் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.