செங்கல்பட்டு: கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் மக்களுக்கு பயன் தரும் வகையில் விரைவில் மலிவு விலை உணவகம் அமைக்கப்படும் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். செங்கல்பட்டு மாவட்டம், கிளாம்பாக்கம், கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தில் ரூ.14.30 கோடி மதிப்பீட்டில் புதிய காவல் நிலையம் கட்டுமான பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழா இன்று நடைபெற்றது. இந்த நிகழ்வில் அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன், பி.கே.சேகர்பாபு உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு பணிகளை துவங்கி வைத்தனர்.
இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் சேகர்பாபு; கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் ரூ.14.30 கோடியில் காவல் நிலையம் கட்ட அடிக்கல் நாட்டப்பட்டது. கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் பயணிகளின் வசதிக்காக மலிவு விலை உணவகம் அமைக்கப்படும். கோயம்பேடு பேருந்து நிலையத்தில் 32 கடைகள் பயன்பாட்டில் இருந்தது. அதன் உரிமையாளர்களுக்கு மாற்று கடைகள் சலுகை விலையில் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பேருந்து நிலையத்தை திறந்த 35 நாட்களுக்குள் தேவையான 90% அடிப்படை வசதியை செய்துள்ளோம் வெகு விரைவில் மக்களுக்கு பயன் தரும் வகையில் ATM மையங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.