சென்னை: அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டை முன்னிட்டு ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பிக்க தனி இணையதளம் ஒன்றை அறநிலையத்துறை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து அறநிலையத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு வருகிற ஆகஸ்ட் 24 மற்றும் 25 ஆகிய இரு நாட்கள் பழனியில் நடத்தப்பட உள்ளது. மாநாட்டில் முருக பக்தர்கள் பங்கேற்கவும், பேராளர்கள் மற்றும் ஆய்வு மாணவர்கள் ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பிக்கவும் https://muthamizhmurugan maanadu2024.com/ என்ற தனி இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது. ஆய்வுக் கட்டுரைகள் தமிழ்க் கடவுள் முருகபெருமானை கருப்பொருளாக கொண்டு அறிவிக்கப்பட்டுள்ள தலைப்புகளில் இருக்க வேண்டும். ஆய்வுக்கட்டுரைகள் எழுதுவதற்கான வழிமுறைகள்: முருகன் தொடர்பான ஆய்வுக்கட்டுரைகள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.
கட்டுரைகள் 6 பக்கங்களுக்கு மிகாமலும், பக்கத்தின் அளவு ஏ4 அச்சில் 1.5 வரி இடைவெளியில் எழுத்தளவு 12 ஆக இருக்க வேண்டும். கட்டுரைகள் தமிழிலோ அல்லது ஆங்கிலத்திலோ இருக்கலாம். கட்டுரையின் முன்பக்கத்தில் கட்டுரை தலைப்பு, கட்டுரையாளரின் பெயர் மற்றும் தகுதிப்பாடுகள் போன்ற விவரக்குறிப்புகளை குறிப்பிட்டு வரும் 20ம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும். கூடுதல் விவரங்களை 94986 65116 அல்லது mmm2024palani@gmail.com மின்னஞ்சல் மூலமாக தெரிந்துகொள்ளலாம். சிறந்த ஆய்வு கட்டுரைகள் ஆய்வு மலரில் இடம்பெறுவதுடன், பாராட்டு சான்றிதழ்களும் அளிக்கப்படும். அதுமட்டுமின்றி தேர்ந்தெடுக்கப்பட்ட சிறந்த கட்டுரைகள் முதன்மை ஆய்வரங்கத்தில் வாசிப்பதற்கான வாய்ப்பும் ஏற்படுத்தி தரப்படும். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.