Friday, September 13, 2024
Home » சர்வதேச முதலீடுகளை ஈர்க்க முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை அமெரிக்கா பயணம்: புலம் பெயர்ந்த தமிழர்களையும் சந்திக்கிறார்

சர்வதேச முதலீடுகளை ஈர்க்க முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை அமெரிக்கா பயணம்: புலம் பெயர்ந்த தமிழர்களையும் சந்திக்கிறார்

by Ranjith

* உலகின் முன்னணி தொழில் நிறுவனங்களின் பிரதிநிதிகளை சந்தித்துப் பேசுகிறார்

* தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக பல புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகும் என தகவல்

சென்னை: தமிழ்நாட்டிற்கு சர்வதேச முதலீடுகளை ஈர்க்க முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை அமெரிக்கா புறப்படுகிறார். இந்த பயணத்தின்போது உலகின் முன்னணி தொழில் நிறுவனங்களின் பிரதிநிதிகளை சந்தித்து பல புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் அவர் கையெழுத்திடக் கூடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான புதிய அரசு பொறுப்பேற்றதும் மாநிலத்தின் பொருளாதாரத்தை உயர்த்தும் வகையில் பல்வேறு முக்கிய திட்டங்களை அறிவித்தும், அதனை திறம்பட செயல்படுத்தியும் வருகிறது.

குறிப்பாக, 2030ம் ஆண்டில் மாநிலத்தின் பொருளாதார மதிப்பு ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலராக உயர்த்தும் இலக்கை நிர்ணயித்து அதற்கான பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் மேற்கொண்டு வருகிறார். அதன் ஒரு பகுதியாக துபாய், அபுதாபி, சிங்கப்பூர், ஜப்பான், ஸ்பெயின் உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கும் சென்று முதலீட்டாளர்களை சந்தித்து தமிழகத்தில் முதலீடு செய்ய வரும்படி அழைப்பு விடுத்துள்ளார். அதன் தொடர்ச்சியாக, உலக நாடுகளின் முன்னணி நிறுவனங்களை சந்தித்து சர்வதேச அளவில் தமிழகத்திற்கு தொழில் முதலீட்டை கொண்டுவரும் வண்ணம், முதல்வர் மு.க.ஸ்டாலின் அமெரிக்கா செல்ல திட்டமிட்டுள்ளார்.

இதனை உறுதி செய்யும் வகையில் அண்மையில் சென்னை தலைமைச் செயலகத்தில் அமெரிக்க துணை தூதர் கிறிஸ்டோபர் ஹாட்ஜஸ், முதல்வரை நேரில் சந்தித்துப் பேசினார். இந்நிலையில், நாளை சென்னையில் இருந்து முதல்வர் அமெரிக்காவிற்கு புறப்படுகிறார். கிட்டத்தட்ட 17 நாட்கள் அரசு முறை பயணம் மேற்கொள்ள உள்ளார். அதன்படி, ஆகஸ்ட் 28ம் தேதி முதல் செப்டம்பர் 2ம் தேதி வரை சான்பிரான்சிஸ்கோவில் உள்ள உலகின் முன்னணி நிறுவனங்களின் பிரதிநிதிகளை சந்தித்துப் பேசுகிறார்.

இதில், ஆக.29ம் தேதி சான்பிரான்சிஸ்கோவில் நடைபெறும் இன்வெஸ்டார் கான்கிளேவ் கூட்டத்தில் முதல்வர் பங்கேற்று உரை நிகழ்த்துகிறார். ஆக.31ம் தேதி புலம் பெயர்ந்த தமிழர்களை சந்தித்து பேசுகிறார். இந்த நிகழ்வுகளை முடித்த பின்னர், செப்.2ம் தேதி சான்பிரான்சிஸ்கோவில் இருந்து சிக்காகோ செல்லும் முதல்வர் மு.க.ஸ்டாலின் அன்று முதல் 10 நாட்களுக்கு அமெரிக்காவில் உள்ள பல்வேறு முக்கிய நிறுவன முதலீட்டாளர்களை சந்தித்து தமிழகத்தில் தொழில்களை தொடங்கவும், முதலீடுகளை செய்யவும் அழைப்பு விடுக்கிறார். குறிப்பாக, சர்வதேச அளவில் உள்ள ஃபார்ச்சூன் 500 நிறுவனத்தின் தலைமை நிர்வாகிகளை அவர் சந்திக்கிறார்.

உயர்தர வேலைவாய்ப்புகள் மற்றும் மாநிலத்தின் பொருளாதார மேம்பாட்டை உயர்த்தும் வகையில் முதல்வரின் இந்த சந்திப்பு அமையும் என பொருளாதார வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். இந்த சந்திப்புகளுக்கு இடையே செப்.7ம் தேதி வெளிநாடு வாழ் தமிழர்களுடனான நிகழ்ச்சியிலும் முதல்வர் கலந்து கொள்ள உள்ளார். ஒட்டுமொத்தமாக அனைத்து நிகழ்ச்சிகளையும் நிறைவு செய்து செப்டம்பர் 12ம் தேதி அவர் சென்னை திரும்ப உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதில் தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சிக்காக பல புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.  முதல்வரின் அமெரிக்க பயணத்தையொட்டி, முன்னதாகவே அமெரிக்கா சென்றுள்ள தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, சிகாகோ – அமெரிக்க தமிழர்களுடனான முதல்வர் சந்திப்பு நிகழ்ச்சி குறித்து அமெரிக்க தமிழ் சங்கங்களின் நிர்வாகிகள், பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

* 2030ம் ஆண்டில் மாநிலத்தின்
பொருளாதார மதிப்பு ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலராக உயர்த்தும் இலக்கை நிர்ணயித்து அதற்கான பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் மேற்கொண்டு வருகிறார்

You may also like

Leave a Comment

18 + eighteen =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi