Thursday, July 4, 2024
Home » சென்னை புறநகரில் செயற்கை கோள் நகரங்கள் அமைக்க மேம்பாட்டு திட்டம் தயாரிக்கும் பணி தீவிரம்: சிஎம்டிஏ நடவடிக்கை

சென்னை புறநகரில் செயற்கை கோள் நகரங்கள் அமைக்க மேம்பாட்டு திட்டம் தயாரிக்கும் பணி தீவிரம்: சிஎம்டிஏ நடவடிக்கை

by Ranjith

சென்னை: சென்னை புறநகரில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய பகுதிகளை இணைத்து, புதிய செயற்கை கோள் நகரங்கள் அமைப்பதற்காக, மேம்பாட்டு திட்டம் தயாரிக்கும் பணி நடைபெற்று வருவதாக, சிஎம்டிஏ தெரிவித்துள்ளது. சென்னை பெருநகர பகுதியின் விரிவாக்கத்தில் செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் சில பகுதிகளும் அடங்கியுள்ளன. இந்த விரிவாக்க பகுதியில் வளர்ச்சியை கொண்டு வர சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்திடம் பல்வேறு திட்டங்கள் உள்ளது. இந்த பகுதிகளில் அனைத்து துறை வளர்ச்சியையும் முன்னெடுத்துச் செல்வதற்கு சாலைகள், பாலங்கள், பூங்கா உள்ளிட்ட பொழுது போக்கு வசதிகள், விளையாட்டு மைதானம் போன்ற உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்காக செங்கல்பட்டு மாவட்டத்திற்கு ரூ.32 கோடி, காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு ரூ.35 கோடி, திருவள்ளூர் மாவட்டத்திற்கு ரூ.25 கோடி, ராணிப்பேட்டை மாவட்டத்திற்கு ரூ. 8 கோடி என நிதியானது ஒதுக்கீடு செய்யப்பட்டு இருந்தது. இதில் செங்கல்பட்டு புதுநகர் வளர்ச்சிக்கான பகுதியானது 136.25 சதுர கிலோமீட்டர் பரப்பளவை கொண்ட 60 கிராமங்களை உள்ளடக்கியதாக வரையறுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் செங்கல்பட்டு மாவட்டம் பரங்கிமலை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள முடிச்சூர் கிராமத்தின் அமுதம் நகர், நேமி நத்தம் நகர் மற்றும் வரதராஜ பெருமாள் நகர் பகுதிகளுக்கு மழைநீர் வடிகால் அமைக்க ரூ.4.20 கோடி வழங்கப்பட்டு உள்ளது.

காஞ்சிபுரம் நகரத்திற்கான விரிவான மேம்பாட்டுத் திட்டமும் இப்போது தயாரிக்கப்பட்டு உள்ளது. சென்னையில் உள்ள வசதிகளை போல காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 17 கிராமங்கள் உட்பட 65 கிராமங்களை இணைத்து 2 செயற்கை கோள் நகரங்களை உருவாக்க சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் சார்பில் திட்டமிடப்பட்டு உள்ளது. இதற்காக நகராட்சி துறை சார்பில் திருமழிசை, மீஞ்சூர், திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் சுற்றியுள்ள பகுதிகளுக்கான சென்னை பெருநகரப் பகுதிக்கான நகர மேம்பாட்டுத் திட்டம் வரைவு செய்யப்பட்டு அரசுக்கு அனுப்பப்பட்டது.

இது சம்பந்தமாக, முக்கிய பகுதியின் பாரம்பரியம் மற்றும் மறுமேம்பாடு ஆகியவற்றை மையமாகக் கொண்டு விரிவான மேம்பாட்டுத் திட்டமும், என்.எச்-48 ஐ ஒட்டிய கிராமங்களை மையமாகக் கொண்ட புதிய நகர மேம்பாட்டுத் திட்டமும் தயாரிக்கப்பட்டு வருகிறது. காஞ்சிபுரம் நகராட்சி பகுதி வளர்ச்சித் திட்டத்திற்காக 17 கிராமங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அதன்படி, 36.14 சதுர கிலோ மீட்டர் அளவில் வையாவூர், கலையானூர், புத்தேரி, மெலம்பி, கிளம்பி, சித்தேரிமேடு, கோனேரிக் குப்பம், திம்மசமுத்தி ரம், அச்சுக்கட்டு, நெட்டேரி உள்ளிட்ட 17 கிராமங்களை ஒருங்கிணைத்து வளர்ச்சியை உறுதி செய்ய சி.எம்.டி.ஏ. திட்டமிட்டு பணிகளை துவங்கி உள்ளது.

You may also like

Leave a Comment

twelve + four =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi