திருப்பூர்: இன்ஸ்டாகிராம் மூலம் காதல் வயப்பட்ட சிறுவனும், சிறுமியும் திருப்பூர் பஸ் நிலையத்துக்கு வந்து தவித்தபோது போலீசில் சிக்கினர். திருப்பூர் புதிய பஸ் நிலையத்தில் ேநற்று காலை திருப்பூர் வடக்கு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பஸ் நிலையத்தில் 15 வயது சிறுவன் மற்றும் 14 வயது சிறுமி எங்கே செல்வது என்று தெரியாமல் தவித்தபடி நின்றுள்ளனர். சந்தேகம் அடைந்த போலீசார் இருவரையும் மீட்டு விசாரணை நடத்தினர். அப்போது அந்த சிறுவன் புதுக்கோட்டையை சேர்ந்தவன் என்பதும், சிறுமி கடலூரை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது. இன்ஸ்டாகிராம் மூலமாக 2 பேருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இருவரும் செல்போன் நம்பரை பரிமாறி கொண்டு பேச ஆரம்பித்தனர். முதலில் நண்பர்களாக பேசிக்கொண்ட அவர்கள் பின்னர் காதலிக்க தொடங்கினர். கடந்த ஒரு வருடமாக அவர்களது காதல் நீடித்தது. இருவரும் திருமணம் செய்ய முடிவு செய்தனர். வீட்டில் தெரிந்தால் பெற்றோர் எதிர்ப்பு தெரிவிப்பார்கள் என்று கருதி வெளியேறி திருப்பூர் புதிய பஸ் நிலையம் வந்துள்ளனர். அங்கிருந்து எங்கே செல்வது என்று தெரியாமல் தவித்தபோதுதான் போலீசில் சிக்கியது தெரியவந்தது. போலீசார் இருவரையும் திருப்பூரில் உள்ள ஒரு காப்பகத்தில் ஒப்படைத்தனர். பின்னர் இருவரின் பெற்றோருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. நேற்று மாலை இருவரது பெற்றோரும் திருப்பூர் வடக்கு போலீஸ் நிலையத்திற்கு வந்தனர். சிறுவன் சிறுமிக்கு அறிவுரை கூறிய போலீசார் பெற்றோருடன் அனுப்பி வைத்தனர்.