திருச்செங்கோடு, நவ.4: 31வது தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு நாமக்கல் மாவட்டத்தில் நடந்தது. அதில் நாமக்கல் மாவட்ட அளவில் திருச்செங்கோடு அரசு ஆண்கள் மேல் பள்ளியில் இருந்து 8 ஆய்வுக்கட்டுரைகள் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளது. நாமக்கல் மாவட்ட அளவில் இருந்து கோயம்புத்தூரில் நடைபெறும் வட்டார அளவிலான இந்த அறிவியல் குழந்தைகள் மாநாட்டிற்கு, இப்பள்ளியின் 8ம் வகுப்பு மாணவர்கள் ஹரிஷ் மற்றும் ருமித்ரன் ஆகியோர் அடங்கிய குழுவின் ஆய்வுக்கட்டுரை தேர்ந்தெடுக்கப்பட்டது.
காற்று கழிவான கார்பன் டைஆக்ஸைடு உள்ளிட்ட பொருட்களில் இருந்து மை தயாரித்தல் என்ற தலைப்பின் கீழ், சமர்ப்பிக்கப்பட்ட ஆய்வுக் கட்டுரை, சிறந்த ஆய்வு கட்டுரையாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.இந்த மையை எழுதவும், கணினி பிரிண்ட்டரிலும் பயன்படுத்தலாம். வீணான கழிவுப் பொருட்களில் இருந்து, பயனுள்ள பொருட்கள் தயாரிப்பது குறித்து ஆய்வுக் கட்டுரை சமர்ப்பித்த மாணவர்களையும், வழிகாட்டி ஆசிரியர் திருவருள்செல்வனையும், பள்ளித்தலைமை ஆசிரியர் பாலசுப்ரமணியம், உதவித் தலைமை ஆசிரியை சத்யவதி மற்றும் ஆசிரியர்கள் பாராட்டி வாழ்த்துத் தெரிவித்தனர்.