இந்த நிலையில் மீண்டும் கிரிக்கெட் போட்டிக்கு திரும்பிய கே.எல்.ராகுல் சிறப்பாக விளையாடி பட்டையை கிளப்பினார். மேலும் ஒரு நாள் கிரிக்கெட்டில் அடுத்த கேப்டன் இவர்தான் என்ற அளவுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல பெயரை எடுத்தார். இந்த நிலையில் ராகுல் நன்றாக விளையாடிக் கொண்டிருந்த நிலையில் இந்தியா-இங்கிலாந்து அணிக்கு இடையிலான டெஸ்ட் போட்டியின்போது மீண்டும் ராகுலுக்கு காயம் ஏற்பட்டது. இதனையடுத்து அவர் ஓய்வில் இருந்த போது ஏற்கனவே காயம் ஏற்பட்ட இடத்தில் மீண்டும் வலி இருப்பதை ராகுல் உணர்ந்தார். தேசிய கிரிக்கெட் அகாடமியில் அவருக்கு பயிற்சிகள் வழங்கப்பட்டது. எனினும் லேசான வலி இருப்பதாகவும் தம்மால் மனதளவில் நம்பிக்கையாக இருக்க முடியவில்லை என்றும் மருத்துவர்களிடம் கூறியிருக்கிறார். இதனால் இந்தியா இங்கிலாந்து அணிக்கு இடையிலான 5வது டெஸ்ட் போட்டியில் இருந்து கே எல் ராகுல் நீக்கப்பட்டு இருக்கிறார்.
இந்நிலையில் பிசிசிஐயின் அறிவுறுத்தலின்படி தற்போது கே.எல்.ராகுல் லண்டன் சென்று அங்கு சிகிச்சை மேற்கொண்டு உள்ளார். ஏற்கனவே அறுவை சிகிச்சை செய்த இடத்தில் மீண்டும் வலி இருப்பதால் அங்கு பரிசோதனை நடத்தப்படுகிறது. மேலும் இது மனதளவில் உள்ள சந்தேகமா என்ற பரிசோதனையும் நடத்தப்பட உள்ளது. இதற்கிடையே ராகுலின் உடல்நிலை குறித்து லக்னோ அணி நிர்வாகமும் தீவிரமாக கண்காணித்து வருகிறது.
பிசிசிஐ மருத்துவக்குழு மற்றும் லண்டனில் ராகுலின் நிலை குறித்து அணி நிர்வாகம் கேட்டு அறிந்து வருகிறது. ராகுல் ஐபிஎல் தொடர் தொடங்குவதற்கு முன்பு உடல் தகுதியை பெற்று விடுவார் என்று நம்புவதாக லக்னோ அணி நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர். எனினும் ஐபிஎல் தொடரில் ராகுல் முதல் சில போட்டிகளை விளையாடமாட்டார் என்று தெரிகிறது. லக்னோ அணியை பொறுத்தவரை தங்களுடைய முதல் ஆட்டத்தை வரும் 24ம் தேதி ஜெய்ப்பூரில் ராஜஸ்தானுடன் விளையாடுகிறது.