ஜி-20 உச்சி மாநாட்டில் கோடீஸ்வரர்களுக்கு வரி விதிக்கும் திட்டத்தை இந்தியா ஆதரிக்குமா?: ஒன்றிய அரசுக்கு காங்கிரஸ் கேள்வி

புதுடெல்லி: ஜி-20 உச்சி மாநாட்டில் கோடீஸ்வரர்களுக்கு 2 சதவீத வரி விதிக்கும் பிரேசிலின் முன்மொழிவு குறித்து விவாதிக்கப்படும் போது இந்தியாவின் நிலை என்ன என்பது விளக்க வேண்டும் என்று ஒன்றிய அரசை காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது. காங்கிரஸ் பொது செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் சமூக வலைதள பக்கத்தில் பதிவிடுகையில், ஒரு வருடத்துக்கு முன்பு, ஜி- 20 உச்சி மாநாடு டெல்லியில் நடந்தது. ஜி- 20 தலைவர் பதவி ஒவ்வொரு ஆண்டும் அதன் உறுப்பு நாடுகளுக்கு சுழற்சி அடிப்படையில் வழங்கப்படும். இரண்டு மாதங்களுக்குப் பிறகு அடுத்த ஜி-20 உச்சி மாநாடு பிரேசிலில் நடக்க உள்ளது.

ஆனால் மாநாட்டை நடத்துவது பற்றி நமது உயிரியல் ரீதியாக பிறக்காத பிரதமர் செய்ததை போல் பிரேசில் தம்பட்டம் எதுவும் அடித்து கொள்ளவில்லை. நவம்பர் 2024 உச்சிமாநாட்டில், 1000 கோடிக்கு மேல் சொத்துகள் உடைய கோடீஸ்வரர்கள் மீது 2 சதவீத சொத்து வரிக்கான திட்டத்தை பிரேசில் முன்வைத்துள்ளது. இந்த முன்மொழிவை பிரான்ஸ், ஸ்பெயின், தென்னாப்பிரிக்கா மற்றும் ஜெர்மனி ஏற்கனவே ஆதரித்துள்ளன. இந்தியா இது குறித்து மவுனமாக உள்ளது. இது பற்றி விவாதிக்கப்படும் போது இந்தியாவின் நிலை என்னவாக இருக்கும்.ஒரு அறிக்கையின்படி இந்தியாவில் 334 பேர் ரூ.1000 கோடிக்கு மேல் சொத்துக்கள் வைத்துள்ளனர் என தெரியவந்துள்ளது. இந்த திட்டம் பற்றி விவாதிக்கப்படும் போது இந்தியாவின் நிலை என்ன என்பது குறித்து ஒன்றிய அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

 

Related posts

ரூ 100 கோடி மதிப்பு நிலத்தை குமாரசாமிக்கு விடுவிக்க எடியூரப்பா பெற்ற பங்கு எவ்வளவு?

முடிவுக்கு வருகிறது போராட்டம் நாளை பணிக்கு திரும்பும் கொல்கத்தா டாக்டர்கள்

இந்தியாவிலிருந்து வெடிமருந்துகள் உக்ரைன் செல்கிறதா? ஒன்றிய அரசு மறுப்பு