மிர்பூர்: வங்கதேச மகளிர் அணியுடனான முதல் ஒருநாள் போட்டியில், இந்தியா 40 ரன் வித்தியாசத்தில் அதிர்ச்சி தோல்வியை சந்தித்தது. தேசிய ஸ்டேடியத்தில் நேற்று நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற இந்தியா முதலில் பந்துவீசியது. மழை காரணமாக ஆட்டம் தடைபட்டதால், தலா 44 ஓவர் கொண்ட போட்டியாக நடுவர்கள் அறிவித்தனர். வங்கதேசம் 43 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 152 ரன் எடுத்தது. காயம் காரணமாக ஷோர்னா அக்தர் பேட் செய்ய வரவில்லை. கேப்டன் நிகர் சுல்தானா அதிகபட்சமாக 39 ரன், பர்கானா 27, சுல்தானா 16 ரன் எடுக்க, மற்ற வீராங்கனைகள் கணிசமாக ரன் எடுக்கத் தவறினர். இந்திய பந்துவீச்சில் அமன்ஜோத் கவுர் 4, தேவிகா 2, தீப்தி 1 விக்கெட் வீழ்த்தினர். இதைத் தொடர்ந்து, டிஎல்எஸ் விதிப்படி இந்தியா 44 ஓவரில் 154 ரன் எடுத்தால் வெற்றி என இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
அடுத்தடுத்து விக்கெட் சரிந்ததால் ரன் குவிக்க முடியாமல் தடுமாறிய இந்திய அணி 35.5 ஓவரிலேயே 113 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. தீப்தி 20, யஸ்டிகா, அமன்ஜோத் தலா 15, மந்தனா 11, ஜெமிமா, பிரியா, தேவிகா 10 ரன் எடுக்க, மற்ற வீராங்கனைகள் ஒற்றை இலக்க ரன்னில் அணிவகுத்தனர். வங்கதேச பந்துவீச்சில் மருபா அக்தர் 4, ரபியா கான் 3, நகிதா அக்தர், சுல்தானா தலா 1 விக்கெட் வீழ்த்தினர். 40 ரன் வித்தியாசத்தில் வென்ற வங்கதேசம் 1-0 என முன்னிலை வகிக்க, 2வது ஒருநாள் நாளை மறுநாள் நடக்கிறது.