தொடர்ந்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய வங்காளதேசம் 149 ரன்னில் ஆல் அவுட் ஆனது. இந்தியா தரப்பில் பும்ரா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதையடுத்து 227 ரன்கள் முன்னிலையுடன் தனது 2வது இன்னிங்சை தொடங்கிய இந்தியா தனது 2வது இன்னிங்சில் 64 ஓவர்களில் 4 விக்கெட்டை மட்டும் இழந்து 287 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. இந்தியா தரப்பில் சுப்மன் கில் 119* ரன்களும், ரிஷப் பண்ட் 109 ரன் எடுத்தனர். இதையடுத்து 515 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய வங்காளதேசம் நேற்றைய 3ம் நாள் ஆட்ட நேர முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 158 ரன்கள் அடித்திருந்தது.
ஷாண்டோ 51 ரன்களுடனும், ஷகிப் அல் ஹசன் 5 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இந்தியா தரப்பில் அஸ்வின் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார். இந்நிலையில், இன்று 4வது நாள் ஆட்டம் நடைபெற்றது. இதில் இந்தியாவின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாத வங்காளதேச வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து வெளியேறினர். இதில் ஷகிப் அல் ஹசன் 25 ரன், லிட்டன் தாஸ் 1 ரன், மெஹதி ஹசன் மிராஸ் 8 ரன் எடுத்து ஆட்டம் இழந்தனர். மறுமுனையில் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த கேப்டன் ஷாண்டோ 82 ரன்னில் வெளியேறினார்.
இதையடுத்து களம் புகுந்த தஸ்கின் அகமது 5 ரன், ஹசன் மஹ்மூத் 7 ரன்னில் ஆட்டம் இழந்தனர். இறுதியில் வங்காளதேச அணி 62.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 234 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் இந்திய அணி 280 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்தியா தரப்பில் ரவிச்சந்திரன் அஸ்வின் 6 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இந்த வெற்றியின் மூலம் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 என இந்தியா முன்னிலையில் உள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான 2வது டெஸ்ட் போட்டி வரும் 27ம் தேதி தொடங்குகிறது.