சென்னை: தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: இந்த நாடாளுமன்ற தேர்தலில் மக்களின் எதிர்ப்பு அலை காரணமாக மிகுந்த பதற்றத்துடனும், அச்சத்துடனும் பிரதமர் மோடி நிதானமிழந்து பேசி வருகிறார். அதன் உச்சகட்டமாக 1982ல் காந்தி திரைப்படம் எடுக்கும் வரை உலகம் காந்தியை பற்றி அறிந்திருக்கவில்லை என்று பிரதமர் பொறுப்பில் இருக்கும் மோடி பேசியிருப்பது அவரது அரசியல் அறியாமையை வெளிப்படுத்துகிறது.
நாட்டு மக்களிடம் அன்பை மட்டுமே காட்டிய காந்தியை ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தினாலும், இந்து மகாசபையை சேர்ந்த சாவர்க்கரினாலும் மூளை சலவை செய்யப்பட்டு மதவெறி தூண்டப்பட்ட நாதுராம் கோட்சே மகாத்மா காந்தியை படுகொலை செய்தார். அவரது கொலை முயற்சிக்கு பின்னாலே ஆர்.எஸ்.எஸ்., இந்து மகாசபை சித்தாந்தம் அடங்கியிருப்பதை எவரும் மறுக்க முடியாது. காந்தியடிகளை அட்டன்பரோ சினிமாவாக எடுக்க வேண்டும் என்று நினைத்தாரே ஒழிய, அவரை சினிமாவாக எடுத்ததால்தான் உலக மக்களால் காந்தியடிகள் அறியப்படுவார் எனக் கருதவில்லை என்றார்.